அக்கரைப்பற்று பாடசாலை சர்ச்சை : போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேடாக பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது- அக்கரைப்பற்று தவிசாளர் விளக்கம்
or

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/அக்/அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலய பெயர்மாற்றம் மற்றும் பல சர்ச்சைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கரைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்று தவிசாளரின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர், உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள், அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/அக்/அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம் அந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் சனத்தொகை பரம்பலுடன் ஒப்பிடுகையில் தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும் கூட தலைவர் அஷ்ரபின் பெயரை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டமையினால் அதனை நாங்கள் பொருந்திக்கொண்டோம். இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்த பாடசாலை உருவாக்கப்பட்ட போது லீடர் அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம் என்று ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் அப்பாடசாலையின் ஸ்தாபகர் என்று கூறப்படுபவரால் அவரது சிரேஷ்ட புதல்வியின் பெயரான ஸபா என்கின்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
திருட்டுத்தனமாக ஆவணங்களை தயாரித்து போலியான ஆவண சமர்ப்பிப்புக்களை கல்வி அமைச்சின் காரியாலயங்களுக்கு வழங்கி பாடசாலையின் பெயரை மாற்றியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சேர் றாஸிக் பரீட், பதியுதீன் மஹ்மூத் போன்ற கிழக்கு வெளியே இருந்த முஸ்லிம் அரசியல்தலைவர்களை கௌரவித்த நாங்கள் கிழக்கில் பிறந்து முழு தேசத்திற்கும் தலைமை கொடுத்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் பெயரில் பாடசாலை வைத்திருக்க விரும்புவது தவறா? பிரதேச செயலக அதிகாரிகளின் உதவியுடன் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு உரிய காணியை பாடசாலைக்கு பெயர் மாற்றியுள்ளதாக அறிகின்றோம். மட்டுமின்றி அந்த பாடசாலையின் ஸ்தாபகராக கூறிக்கொள்பவர் தனது மூத்த மக்களின் பெயரை பாடசாலைக்கும், கட்டிடங்களுக்கு தனது ஏனைய மக்களின் பெயரையும் வைத்துக்கொண்டு அடாத்தாக பாடசாலையை நிர்வகிக்கிறார். இது அப்பாடசாலை அதிபருக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா எம்.பி கல்வி மேம்பாட்டுக்கு செய்த வேலைத் திட்டங்களை எல்லோரும் அறிவர். 90 மாணவர்கள் மட்டுமே உள்ள இப்பாடசாலைக்கு 14 ஆசிரியர்கள், 03 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், 02 சிற்றூழியர்கள், நிறைய பௌதீக வளங்களை போன்றவற்றை கல்வி உயரதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனால் அண்மையில் உள்ள ஏனைய பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றது. இந்த முறைகேடான வளப்பங்கீடுகள் தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அரச உயர்மட்டங்களுக்கு இந்த பிரச்சினையை கொண்டுசெல்ல தயாராகிவருகின்றோம்.
இந்த பாடசாலை உருவாக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்தும் அவரேதான் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்துவருகிறார். இது கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கும், சட்டத்திற்கும் முரணானது. இவரது போலியான ஆவணங்கள், அடாத்தான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தகவலறியும் சட்டத்தின் மூலம் ஆவணங்களை சேகரித்துள்ளோம். இது விடயமாக பலதடவைகள் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் தலைவர் அதாஉல்லாவும், நாங்களும் பேசியிருக்கிறோம் என்றனர்.