போலியான புலிகள் அமைப்பை வழிநடத்திய இராணுவ புலனாய்வு பிரிவு! கோத்தா மற்றும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை

607

ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

20110825_DSJ1

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தவேந்திரன் என அழைக்கப்படும் சுமதிபால சுரேஷ்குமார் வெளியிட்ட தகவல்களுக்கு அமையவே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பிரகீத் எக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் போக செய்யப்பட்டமை சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் போலியான விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றை வழிநடத்தி வந்தமை உறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கபில ஹெந்தாவிதாரண, பிரிகேடியர் வன்னியாராச்சி, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, மேஜர் ஜெனரல் ஜன்மிக லியனகே ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாக காவற்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவேந்திரன், புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தரான ஞானவேல் என்பவருக்கு கீழ் பணியாற்றியுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் இராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

சுமதிபால சுரேஷ்குமாரின் தந்தை சிங்கள இனத்தவர் என்பதுடன் தாய் தமிழ் பெண். இதனால், சுரேஷ்குமார் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை சரளமாக உரையாடக் கூடியவர்.

16 வயதில் அதாவது 1985 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இவர் இணைந்துள்ளார். தாய் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதுடன் தந்தை இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்த போது, அவர்கள் புதைத்த கண்ணி வெடியில் சிக்கி சுரேஷ்குமார் காலை இழந்தார்.

இதனையடுத்து புலிகள் அமைப்பு,, அவரை தமது புலனாய்வு பிரிவில் இணைந்துள்ளதுடன் தவேந்திரன் என்ற பெயரையும் சூட்டியுள்ளது.

இவர், விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த தென் பகுதியை சேர்ந்த அமைப்புகள், சில நபர்கள், ஊடக நிறுவனங்கள் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், எக்நேலியகொட காணாமல் போக செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு பிரிவினர், கைது செய்துள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த லெப்டினட் கேர்ணல் குமார ரத்நாயக்க, லெப்டினட் கேர்ணல், சிறிவர்தன, சார்ஜன்ட் ராஜபக்ச, கோப்ரல் ஜயலத் ஆகியோரிடம் தொடர்பும் விசாரணைகளை நடத்த அவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர், இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், தவேந்திரன் உட்பட இரண்டு தமிழர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.

SHARE