வருடா வருடம் நாம் கொண்டாடுகின்ற முதியோர் தினமானது அவர்களை முதியோர் என தனிமைப்படுத்தி காட்டுகின்றதால் இத்தினத்தை பெரியோர் தினமாக கொண்டாட வேண்டும் என மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.
மேற்படி முதியோர் தின நிகழ்வு கடந்த 22.11.2014 அன்று மகாறம்பைக்குளம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட மாகாணசபை உறுப்பினர்கள் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் மற்றும் திரு.ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் பெரும்பாலான பெரியவர்களும் இந்நிகழ்விற்கு வருகைதந்திருந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கூறுகையில், முதியோர்கள் அநுபவத்தின் பொக்கிஷங்கள் அவர்கள் தான் இளைய தலைமுறையின் வழிகாட்டிகள் ஆவார். இவர்கள் தாம் நிழல் ஆறமுடியாது தாங்கள் அந்த மரத்தின் பழங்களை உண்ணமுடியாது என்று தெரிந்தும் தங்களது கடைசி காலத்தில் மரங்களை நடுவதில் ஊக்கமாக இருப்பார்கள் என்று கூறினார்.
இவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கழிப்பதற்கான வசதிகளை வ்வொரு கிராமந்தோரும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் பெரியவர்களை அவர்களது காலத்தில் கௌரவமாக நடத்த வேண்டியது தற்போதைய இளைஞர் சமூதாயத்தின் தவிர்க்கமுடியாத கடமையாகும் என்றும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.
அத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெரியவர்களுக்கு ஒரு தொகுதி பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.