மகிந்தவின் அழைப்பு கிடைத்தது: மாகாண சபையில் ஆராய்ந்த பின்னரே முடிவு என்கிறார் சி.வி.

515

 

‘வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாண சபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உண்மை நிலையாகும். இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும்’  என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியாவின் புதிய பிரதமராகத் தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை புதுடில்லியில் நடைபெறுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான குழு ஒன்று இதில் பங்குகொள்வதற்காக புதுடில்லி செல்கின்றது.

இதில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை அழைப்பு விடுத்திருந்தார்.  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மூலம் அனுபப்பட்ட அந்த அழைப்புக்கு முதலமைச்சர் இன்று நண்பகல் உத்தியோகபூர்வமாக பதில் அனுப்பியுள்ளார். அந்த பதிலில் முதலமைச்சர் தெரிவித்திருப்பதாவது:

‘கௌரவ பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர் வெளிவிவகார அமைச்சர்
கௌரவ அமைச்சரவர்களுக்கு,

இன்றைய திகதிய உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன். இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள தாமதமாகியேனும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் எனக்கனுப்பிய அழைப்பைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

எமது அமைச்சர் குழாமுடன் பேசியதன் பின் இந்தப் பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன். ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரசாங்கத்தினரிடத்தில் வடமாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும் தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு சகுணமே.

வடமாகாண மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள், வடமாகாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் இவற்றின் மத்தியில் இக் கூட்டுறவு சிந்தனையானது வரவேற்கத்தக்கதே.
எனினும் உங்களுடைய அன்பான அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன். முக்கியமாக அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக் கூடும் என்பதேயாகும். எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாணசபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமே உண்மை நிலையாகும்.

இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும். எனினும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரூடாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதைத் தெரியத் தருகின்றேன்.

உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உணர்வும் எமக்குள் தொடருமென்று நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு தொடர்ந்தால்த்தான் வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் நடைமுறைபடுத்தப்படுவன மட்டுமன்றி எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுவன. நன்றி.

அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

 

புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பில் பங்குகொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு தனக்குக் கிடைத்திருப்பதாகத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பில் வடமாகாண சபையில் ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் அழைப்பு குறித்து கேட்டபோதே வடமாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

SHARE