வீதிகளில் ஆர்ப்பாட்டம் அல்லது அமைதிப் பேரணி நடத்த அனுமதி பெற வேண்டும் என அரசாங்கம் கூறினாலும் கூட, அரசாங்கம் சொல்வதை விட உயர்வான சட்டம் இருப்பதால், அரசாங்கத்தின் தன்னிச்சையான தலையீட்டை சவாலுக்குட்படுத்துவதற்காக இலட்சக்கணக்கான மக்களுடன் கூடிய விரைவில் வீதியில் இறங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் சக்தியால் அமைதியான முறையில் அரச கொடூரம் தோற்கடிக்கப்படும் எனவும், எந்த சூழ்நிலையிலும் அரசு சொத்துக்கள், வீடுகள் அல்லது வேறு எதுவும் அழிக்கப்படாது எனவும், பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் தம்பட்டம் அடிக்கும் குறித்த நபர்கள், மக்கள் முன் வாயை மூடிக்கொண்டு இருப்பது மக்கள் நிராகரிப்பதனால் எனவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள திரிபு நிலை அரசாங்கத்தை மாற்றியமைத்து நாட்டை ஸ்திர நிலைக்கு மீட்டெடுக்கும் வகையில் தேர்தலின் அவசியத்தை இதன் போது வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் நடைமுறையிலுள்ள மேலான சட்டம் தொடர்பாக அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் கிட்டிய காலங்களில் மக்களின் ஆணையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் எனவும், அந்நேரத்தில் இந்த திரிபுபடுத்தப்பட்ட அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, மக்களின் அரசாங்கமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
காதினாலுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதியின் மூலம், எந்த சர்ச்சையும் அல்லது செல்வாக்கும் இல்லாமல் தேசிய மற்றும் சர்வதேச நம்பகத்தன்மை கொண்ட விசாரணையொன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நடத்தி, இதற்கு காரணமான குற்றவாளிகள் எந்தத் தரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நியாயம் கிடைக்க முன் நிற்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சிலர் தனக்கு எதிராக போலி மற்றும் சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு தாம் ஒருபோதும் சளைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த திருடர்கள் இன்று தமக்கு எதிராக சேறு பேசுகின்றனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மத வழிபாட்டுத் தலங்களை கட்டுவதற்கு பணம் செலவழிப்பதை கொள்ளையடிப்பதாக அவர்கள் கருதுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
தான் பிரேமதாஸவின் மகன் என்பதை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், தான் மக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் திருடவில்லை என்பது முழு நாட்டிற்கும் தெரியும் எனவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று (26) நடைபெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். – ada derana