மக்கள் அடிப்படைக்கோட்பாடுகள் கொண்டிருக்கும் பற்றினை காத்திரமாகச் சொல்லியது எழுக தமிழ்!

240

ஆயுதமோதல்களின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட தன்னெழுச்சியான “எழுக தமிழ்” பேரணியானது அடிப்படை கோட்பாடுகள் மீது மக்கள் கொண்டிருக்கும் பற்றுறுதி குறித்து காத்திரமான செய்தியொன்றை வெளிப்படுத்தியிருந்தது என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரான எஸ்.லக்ஸ்மன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் யாழ்.பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்ற பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஜனநாயக ரீதியில், எமது அபிலாசைகளை மக்களாகவே எழுந்து வந்து ஒன்றிணைந்து கூறியமை எமது அரசியல் சார்ந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, எம் தேசத்தின் மீதான இன அழிப்பில் மிகவும் பாதிக்கப்பட்டதும், எம் தேசத்தின் மிக முக்கிய பகுதியுமாகிய கிழக்கு மாகாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சி நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

இது தவிர எமது கலை கலாச்சாரக்குழுவினால், அடையாளச் சிதைக்குட்பட்டு வரும் எமது பாரம்பரிய கலைகளை அங்கீகரித்து மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பில் மாபெரும் முத்தமிழ் விழாவொன்று நடத்தப்பட்டிருந்தது.

இவ்விழாவில் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பல கலைஞர்கள் பங்குபற்றி அளிக்கை செய்திருந்தனர்.

அத்தோடு, எமது தேசத்தில் நடக்கவேண்டிய அபிவிருத்திப்பணிகள், குறுகிய கால நலன்களுக்கும், அரசியல் இலாபங்களுக்குமப்பால் நீண்டகால நோக்குடன் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு பேரவையின் அபிவிருத்திக்குழு செயற்பட்டு வருகின்றது.

இவை தவிர்ந்த கல்விக்குழு மற்றும் பொறுப்பு கூறலுக்கான குழு என்பன விரைவில் தமது பணிகளை ஆரம்பிக்கும்.

தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு ஆண்டு பூர்த்தியடைந்துள்ள இன்றைய நாளில் மீண்டும் ஒரு முறை நாம் இங்கு கூடியிருக்கின்றோம்.

எதுவித தனிப்பட்ட, சுய அரசியல் நலன்களை விடுத்து இனத்தின் நலனை மட்டும் இலக்காகக் கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டிய காலத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து தமிழ் மக்கள் பேரவை 19/12/2015 அன்று முதன்முறையாக தனது உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டிருந்தது.

எனினும், நீங்கள் அனைவரும் அறிந்த வகையில் ஆயுத மோதல்களின் முடிவிற்கு பின்னரான சூழ்நிலையில் எம்மத்தியில் நிலவி வந்த மற்றும் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்ட குழப்பகரமான சூழ்நிலைகள், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான இப்படியான கொள்கை வழி ஒன்றிணைவின் அவசியத்தை வலியுறுத்தி நின்றது.

அதற்கான முன்முயற்சிகள் ஏறத்தாழ நான்கு வருடங்களாகப் பலமட்டங்களில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வருட இறுதியில் தமிழ் மக்கள் பேரவை செயற்பட ஆரம்பித்தது.

இந்த ஒன்றிணைவுக்காக உழைத்த அனைவருக்கும், இனத்தின் நலன்கருதி. கொள்கை வழிப்பட்டு ஒன்றிணைந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

எதிர்காலம் பற்றிய கேள்விக் குறியுடன் நின்றிருந்த மக்களுக்குத் தமிழ் மக்கள் பேரவையின் தொடக்கமும், செயற்பாடுகளும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன என்பது மக்களுடன் நிற்கும் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வெளிப்படையான விடயமாகும்.

அதே நேரம் மக்களின் இந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் எமது கடமைகளையும் பொறுப்புகளையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றபடி எமது இனத்தின் அபிலாசைகளை முன்னிறுத்தி, எமக்காக இழைக்கப்பட்ட அர்ப்பணிப்புகளை மனதில் கொண்டு, நாம் தொடர்ந்தும் மக்களுக்காக உழைப்போம் என இத்தருணத்தில் உறுதிகொள்ளுகிறோம்.

இத்தருணத்தில் கடந்த ஒருவருடத்தில் நாம் செய்தவைகளையும் மீள நினைவுபடுத்தல் அவசியமாகின்றது.

எமது அனைத்துச் செயற்பாடுகளும் எந்த ஒரு தனி மனிதருக்கோ அல்லது தனி அமைப்புகளுக்கோ சொந்தமானதல்ல. எவரும் அப்படி உரிமை கோருவதும் இல்லை.

இவை அனைத்தும், எமது தேசத்தின் பெயரிலான அனைவரினதும் கூட்டுமுயற்சியே.

உண்மையில் இப்படியாக எம்மத்தியில் தனி நபர்களையோ, அமைப்புகளையோ முன்னிலைப்படுத்தாத, கோட்பாடுகளை மட்டும் முன்னிலைப்படுத்துகின்ற தேச நலன் சார்ந்த ஒரு கூட்டு மனோநிலையை உருவாக்கியது தான் தமிழ் மக்கள் பேரவை ஆற்றிய மிகக்காத்திரமான பணி என நான் நம்புகிறேன்.

பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு மிகக்குறுகிய காலத்தினுள், இலங்கை இனப்பிரச்சினையின் தீர்வு குறித்தான தமிழர் தரப்பு தீர்வு வரைபு துறைசார் நிபுணர்களினால் உருவாக்கப்பட்டு, மக்கள் கலந்துரையாடல் மூலம் செழுமைப்படுத்தப்பட்டு முன்வைக்கப்பட்டது.

இப்படியாக மக்கள் பங்களிப்புடன் கூடிய தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. எமது வரலாற்றில் முதன்முறையாக நடந்த ஒருநிகழ்வாக பதியப்பட்டுள்ளது.

இவற்றிற்கு மேலதிகமாக தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளையும், எமது மண்ணில் நடந்த நடக்கும் அநீதிகளையும் உண்மைத் தன்மையுடன் தென்னிலங்கை மக்களுக்குத் தெரிவித்ததன் மூலம் எமது பிரச்சினை மற்றும் அதற்கான நியாயமான தீர்வு குறித்து தென்னிலங்கை மக்களுடன் நேரடியான ஒரு உரையாடலை “வடக்கு தெற்கு மக்கள் கலந்துரையாடல்” எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து வைத்துள்ளோம்.

இது பல்வேறு மட்டங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் பேரவை மீதும் அதன் செயற்பாடுகள் மீதும் திட்டமிட்டு புனையப்பட்ட அவதூறுகளையும் பெருமளவில் களைந்துள்ளது.

இப்படியாக, இலங்கைத் தீவிலுள்ள சகல சமூகங்களிலுமுள்ள முற்போக்கு சக்திகளுடன் இணைந்து எமது மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுக்கான கலந்துரையாடல்களையும், ஆக்கபூர்வ முயற்சிகளையும் இனிவரும் காலங்களில் பேரவை தொடர்ந்தும் மேற்கொள்ளும்.

அத்தோடு, தமிழர்களின் பிரச்சினைகள், தீர்வுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகள் என்பன பற்றியும் சர்வதேச சமூகத்தின் அங்கத்தவர்களுடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணி விளக்கமளித்து வருகின்றோம்.

இந்நிலையில், பேரவையின் செயற்பாடுகளிலுள்ள சில போதாமைகள் குறித்தும் நாம் இத்தருணத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

மக்களுக்கான அரசியலை மேலும் மக்கள் மயப்படுத்தி மக்களுடன் இறங்கி வேலை செய்வதில் மிகுந்த போதாமையிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

அத்தோடு தாயகத்தில் செயற்படும் ஏனைய மக்கள் அமைப்புகளையும், பொது நோக்கில், பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைக்கும் செயற்பாட்டைப் பொறுத்தவரையில் இன்னமும் பல படிகள் முன்னேற வேண்டியிருக்கிறது.

SHARE