மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பகுதியில் இன்று (11.08.2016) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இரு இராணுவ வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு–கொழும்பு நெடுஞ்சாலையில் எல்ப் ரக பார ஊர்தியும் மோட்டார் சைக்கிளும் மோதியதால் ஏற்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்களுமே பலியாகியுள்ளனர்.
அனுராதபுரம் முகடவெல பிரதேசத்தைச் சேர்ந்த கே.பி. நிஹால் பண்டார (வயது 47) மற்றும் அவரது நண்பரான கே.பி.என். குணரத்ன (வயது 38) ஆகியோரே விபத்தில் சிக்கிய படுகாயமடைந்த நிலையில் பலியாகிய இராணுவ வீரர்களாகும்.
விபத்து இடம்பெற்ற சற்று நேரத்தில் படுகாயங்களுக்குள்ளான இருவரும் உடனடியாக வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று இரவு 9 மணியளவில் மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
விபத்து இடம்பெற்ற சற்று நேரத்தில் ஸ்தலத்திற்கு விரைந்த வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய எல்ப் வாகன சாரதியைக் கைது செய்ததோடு வாகனத்தையும் கைப்பற்றி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.