மட்டக்களப்பு மாவட்ட செயலகம் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

211

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் எஸ்.நிலாந்தன் ஆகியோர் குறித்த முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தனர்.

மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் என்பன பட்டியலிடப்பட்டு அது தொடர்பான ஆவணங்களும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தன.

இந்த செய்திகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட செயலகம் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணையினை நடத்தி உண்மைத் தன்மையினை வெளிப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

SHARE