மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பெருந்தோட்டக் காணிகளை விசேட வர்த்தமானி மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் உள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு 1 லட்சத்து 46 ஆயிரம் காணி அலகுகள் தேவைப்படுவதாக காணி இராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கான காணிகளை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள, பொருந்தோட்டக் காணிகளிலுள்ள பயன்படுத்தப்படாத இடங்களை பெற்றுக்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அவ்வாறான காணிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் காணி ஆணையாளர் நாயகம், நில அளவையாளர் திணைக்களம், காணி சீர்திருத்த செயலகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தேவையான காணிகளை அடையாளம் காண்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு காணிகளை அடையாளம் காணும்போது தேசிய கட்டட ஆராய்ச்சி திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் உறுதிப்படுத்தல்கள் கவனத்தில் எடுக்கப்படும்.
மலையகப் பகுதிகளில் ஏலம் மற்றும் கராம்பு உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தமக்கு சொந்தமான நிலத்தைவிட்டு வெளியேற விரும்பாது தொடர்ந்தும் அங்கு வசித்து வருகின்றனர்.
எனினும், இவ்வாறான பகுதிகள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக காணி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.