மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோாத மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம் புனரமைப்பு பணிக்கு மண் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.
நீர்பாசன திணைக்களத்தினால் மாவடியோடை பாலம் மற்றும் அதன் அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டுவந்த பணிகள் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் தலையீடுகள் காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த மாவடியோடைப்பாலம் மழைகாலத்திற்கு முன்பாக பூர்த்திசெய்யப்படாவிட்டால் விவசாயிகள் பாரிய அழிவினை எதிர்நோக்கும் நிலையேற்படும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது பிரச்சினைகள் தொடர்பில் அவரை தெளிபடுத்த முடியாத நிலையிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆற்றுப்பாய்ச்சல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வினை முற்றாக நிறுத்த உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் அவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைத் தந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும்வேளையில் அவற்றினை குழப்பும் வகையில் சில மண் கொள்ளையர்கள் இவ்வாறான விவசாயிகளை தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதாக மண் அகழ்வில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சட்ட விரோத மண் அகழ்வுகளில் ஈடுபடுபவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்புலமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.