மன்னாரில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற இஸ்லாமிய மக்களின் புனித விழாவான ஹஜ் விழாவில் அன்பு, நற்பண்பு, ஒழுக்க விழுமியங்களை கொண்டுள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் விழாவில், தேவையற்ற பொய்யான அரசியல் பரப்புரைகளை செய்த அமைச்சர் றிஸாட் பதியுதீனின் செயலுக்காக மிகவும் மனம் வருந்துகின்றோம் என மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இன்று ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
குறித்த அறிக்கையில்,
பொறுப்புள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள இலங்கை முழுவதற்குமான அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான அமைச்சர் றிசாட் எவ்வாறு ஒரு அமைச்சராகவும் தலைமைப் பண்புள்ள ஒரு தலைவருமாக உள்ளார் என்ற கேள்வி எம்மிடம் எழுந்துள்ளது.
அந்த வகையில் மன்னார் நகர சபைத் தலைவர் மற்றும் நிர்வாகத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி மக்களை திசை திருப்பும் கைங்கரியங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்திருப்பினும் சில உண்மைகளை தெளிவுபடுத்தும் வகையில் இவ் ஊடக அறிக்கையினை பகிரங்கமாக விட வேண்டிய தேவை எமக்கெழுந்துள்ளது.
01. கடந்த 07 வருடங்களுக்கு முன்பு நாம் மன்னார் நகரத்தினை அபிவிருத்தி செய்ய முனைந்த போது அன்றிருந்த நகரசபைத் தலைவரும் நிர்வாகமும் எம்முடன் கருத்து முரண்பட்டுக் கொண்டமையால் எந்த விதமான அபிவிருத்திப் பணிகளையும் எம்மால் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
நகரசபையின் 04 வருட பணிக்காலத்தின் பின் சபை 2015 இல் முடிவடைந்து விட்டது. அதன் பின் செயலாளரின் நிர்வாகத்திலேயே நகரசபை செயற்பட்டது. எனவே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அந்த காலத்தில் வன்னி பிராந்தியத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தவர். ஏன் மன்னார் நகரின் அபிவிருத்தியில் அக்கறை காட்டவில்லை. அதில் இருந்து என்ன புலப்படுகின்றது.?
02. மன்னார் நகரில் புதிய மீன் சந்தையும் தேவையில்லை, மன்னார் நகரில் புதிய கட்டட தொகுதியும் தேவையில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு மன்னார் நகரை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற உண்மையான நோக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அவ்வாறு கூறுவோமா? இலங்கை அரசினால் எமது பகுதிக்கு கிடைக்கப்பெறுகின்ற சொற்ப நிதியையும் நாம் வேண்டாமென்றா கூறுவோம் ?
உண்மை என்னவெனில் முந்தைய நகரசபை நிர்வாகத்தின் போது நகரசபை நிதியில் மன்னார் நகரசபை கட்டட தொகுதிக்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்ட போதும் குறித்த அமைச்சரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இது மட்டுமன்றி மன்னார் பேருந்து நிலையம் அமைக்கவென வந்த நிதியும் அவரது பணிப்பிற்கு அமைய முசலி பிரதேசத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நவீன பேருந்து தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு கால்நடைகளின் தங்குமிடமாக மாறியது என்பதே உண்மை.
03. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாம் கணிசமான வாக்குகளை பெற்றாலும் சிறிய வித்தியாசத்தில்தான் நகரசபை அவர்களது கைகளுக்குச் சென்றது எனக்கூறியுள்ளார்.
மன்னார் நகரசபையின் 7 வட்டாரங்களில் (9உறுப்பினர்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 வட்டாரங்களில் வெற்றிபெற்று 07 உறுப்பினர்களை பெற்றது. ஒரு வட்டாரம் இஸ்லாமிய சகோதரர்களுக்குரியது.
புதிய தேர்தல் முறையினாலேயே குறைந்த வாக்குகளை பெற்ற அமைச்சரின் கட்சியை சேர்ந்தவர்களுக்கு 4 உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றனர். இந்த நிலையில் மோசடியான முறையில் நகரசபையை கைப்பற்ற எடுத்த முயற்சி நேர்மையின்பால் தோற்கடிக்கப்பட்டது என்பதே உண்மை.
04 எதிர் காலத்திலாவது மன்னார் நகரசபை தலைவர் மற்றும் நிர்வாகம் எம்மோடு இணைந்து செயலாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார், மன்னார் நகரசபையை நிர்வகிப்பது நாம், அவ்வகையில் எம்முடனேயே அமைச்சரும் அவரது உறுப்பினர்களும் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டுமென அன்பான கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றோம்.
மன்னார் நகரசபைத் தலைவரையோ அல்லது நிர்வாகத்தையோ இதுவரை உரிய முறையில் சந்திக்காத கௌரவ அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது வேடிக்கையாகவே உள்ளது.
இத்துடன் மேலும் பல யதார்த்தமான கேள்விகள் சிலவற்றை அமைச்சரிடம் முன்வைக்கின்றோம். ஏனெனில் மக்களுக்கு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அமைச்சர் கூறிவருவது எதிர் காலத்தில் ஆரோக்கியமாக இருக்காது என்ற ஒரே ஒரு காரணத்துக்காகவே.
01.தமிழ் மக்களின் காணி பிரச்சினை, வேலை வாய்ப்பு பிரச்சினை, வீட்டுத்திட்ட பிரச்சினை, காணி அபகரிப்புப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் பிரச்சினை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருந்த போதும் நாடாளுமன்றத்திலோ சரி வெளியிலோ சரி அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுண்டா அல்லது பரிந்து பேசியதுதான் உண்டா?
02. எந்தக்கட்சி வந்தாலும் ஆளும்கட்சியை அலங்கரிக்கின்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியை விட்டு விலகாத இவர் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு எந்தளவு பங்களிப்புச் செய்துள்ளார்?
வேலை வாய்ப்பு, காணி வழங்கல், வீட்டுத்திட்டம், அபிவிருத்தி வேலைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் என்பன தமிழ் மக்களுக்கும் இஸ்லாம் மக்களுக்கும் பெற்று கொடுத்துள்ளீர்களா?
03.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குறிப்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களோடு எந்தளவிற்கு இணைந்து பயணித்துள்ளீர்கள்? இதில் மன்னார் நகரசபையை மட்டும் குற்றஞ்சாட்டும் நோக்கம் என்ன?
04.மன்னார் நவீன பேருந்து நிலையத்துக்கு 180 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் 130 மில்லியன் நிதி நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் 50 மில்லியன் நிதி தனது அமைச்சின் ஊடாகவும் ஒதுக்கப்பட்டதாக பேருந்து நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கூறிய போதும் இதுவரை எந்த மில்லியனும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செல்லவில்லை என்பதும் இது தொடர்பான எமது கேள்விக்கு பதிலும் கூற முடியாமல் தவிப்பது ஏன்?
05.மன்னார் மாவட்டத்தின் எந்த ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் குறித்த அமைச்சர் மட்டும் தான், தான் செய்தேன் என உரிமை கோருவது ஏன்? வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பேசுவதில்லையா? மன்னார் நகரின் அபிவிருத்தியில் இதுவரை இவர் செய்த அபிவிருத்தி தான் என்ன? இவர் கைத்தொழில் வாணிப அமைச்சரா? அல்லது எல்லா அமைச்சும் இவரதுதானா?
கேள்விகள் நீண்டு கொண்டு செல்கிறது, அமைச்சரின் கௌரவம் கருதி நிறுத்தி கொள்கின்றோம். எனவே கௌரவ அமைச்சரை நாங்கள் வினயமாக கேட்டுக்கொள்வது.
மதங்களின் பெயரால் அரசியல் நடத்தாதீர்கள், உண்மைக்கு புறம்பாக அரசியல் பரப்புரை செய்யாதீர்கள்? மக்களுக்கு உண்மை நிலையினை எடுத்துக் கூறுங்கள்? மக்களுக்காக செயலாற்ற எப்போதும் தயாராக உள்ளோம். மன்னார் மண்ணின் மைந்தர்களாக நகரை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதே எமது இலக்கு.
சந்தைக்கட்டம், கடற்கரையோர இயற்கைப்பூங்கா, மணிக்கூட்டுக்கோபுரம், விளையாட்டரங்கு ,நவீன மீன்சந்தை கிராமங்களுக்கான வீதிகள் போன்ற பல்வேறு திட்ட முன்மொழிவுகள் எம்மால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவ் வேலைத்திட்டங்களுக்கான நிதி கிடைக்கப்பெற்றதும் இவ் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம் என்பதையும் இவ்வேளையில் கூறிக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.