மதுகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து

273

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்ட இடத்தில் கைதுசெய்வதற்கான வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரைக்குள் பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தியதால் ஞானசார தேரர் தேர்தல் சட்டங்களை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது.

பிரச்சாரக் கூட்டத்தை பொது இடத்தில் நடத்துவதற்கு பொதுபல சேனாவிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் முன்னறிவித்தல் எதுவுமின்றி பிரச்சாரக்கூட்டத்தின் இடத்தை மாற்றியதாக வெளிபென்ன பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மதுகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இது தொடர்பில் கவனம் செலுத்திய மதுகம மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் ஹேமந்த சமரசேகர, ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான 4 பிக்குகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE