மனிதவுரிமை ஆணைக்குழுவும் எம்மை கைவிட்டு விட்டது பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் குற்றச்சாட்டு..!

135

மனிதவுரிமை ஆணைக்குழுவும் நீதியைப் பெற்றுத் தராது எம்மை கைவிட்டு விட்டது என பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வந்தவர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த வருடம் யூன் மாதம் நடைபெற்றிருந்தன. இந் நேர்முகத் தேர்வில் 1046 பேர் தோற்றியிருந்த நிலையில் 676 பேர் நியமனம் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டு, அந்நியமனத்திற்கான மத்திய அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருந்தது. இந்நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு 182 பேரே தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்து அவர்களை நிரந்தர நியமனத்தில் உள்ளீர்பதற்காக பெயர் விபரங்களை வெளியிட்டிருந்தது.

யுத்த காலப்பகுதியிலும் அதனை அண்டிய காலப்பகுதியில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நாம் வலய மட்டத்திலும், மாகாண, மத்திய அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட பல நேர்முகத் தேர்வுகளில் தோற்றியிருந்த போதும் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா தெற்கு வலய தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நியமனத்திலும் அரசியல் தலையீடு காரணமாக சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீண்டகாலம் கற்பித்து வரும் நாம் கோரப்பட்ட தகமைகள், ஆவணங்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கோரப்பட்ட தகமைகள் மற்றும் ஆவணங்களை கொண்டிராத சிலர் உள்ளவாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவே நாம் கருதுவதாகவும் தெரிவித்து பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சார்பாக ஒக்டோபர் 6 ஆம் திகதி வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் 25 பேர் முறைப்பாடு செய்திருந்தோம்.

வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி அபிராமி பாலமுரளி, வடமாகாண சிரேஸ்ட உதவிச் செயலாளர் ஏ.சாந்தசீலன் ஆகியோருக்கு எதிராகவே பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சார்பாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை செய்து எமக்கான ஒரு நீதியை பெற்றுத் தர தவறியுள்ளது. அவர்களும் எம்மை ஏமாற்றிவிட்டார்கள். தற்போது 182 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிகிறோம். முறைகேடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் எவ்வாறு அதனை சீர் செய்யாது நியமனம் வழங்க முடியும் என மத்திய, மாகாண அரசை நாம் கேட்டு நிற்கின்றோம். எமக்கான நீதியைப் பெற நாம் நீதிமன்றத்தையும் நாடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE