-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று(12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மேற்கொள்வதற்காக களனி பல்கலைக்கழக தொல்பொருள் அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், பயிற்சி நிலை நான்கு வைத்திய அதிகாரிகளும், பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இரண்டாவது நாளாக இணைந்துகொண்டனர்.






மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை (12) காலை 7.00 மணியளவில் 12 ஆவது நாளாக குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய தினமும் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை யிலான குழுவினரும், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த அகழ்வு பணிகளானது அவ் கட்டடத்தின் நுழைவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தற்போது அகழ்வு பணிகள் குறித்த கட்டடத்தின் மத்திய பகுதியிலும் இடம் பெற்று வருகின்றது.
கடந்த 6 ஆம் திககி இடம்பெற்ற அகழ்வு பணிகளில் மனிதவளம் குறைவாக காணப்பட்டதை தொடர்ந்து அகழ்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.