மன்னாரில் தொடரும் சட்டவிரோத கற்றாலை   அகழ்வுகள்

103
மன்னார் நகர் நிருபர்
மன்னார் மாவட்டம் புதுக்குடியிருப்பு கிராமத்தின் பாதுகாக்கப்பட்ட வன பிரதேசமான நாரா பாடு பகுதியில் சட்டவிரோதமாக கற்றாலை அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை 9.00 மணியளவில்  புதுக்குடியிருப்பு கிராமத்தின் நாரா பாடு பகுதியில் சட்டவிரோதமாக கற்றாலை அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த இருவரும் பிடுங்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட 253 kg  கற்றாலை செடிகளும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சில பிரதேசங்களில் வியாபார நோக்கத்திற்காக கற்றாலை செடிகள் களவாடப்பட்டு வருகின்றது. இவ் கற்றாலை செடியானது பல மருத்துவ குணத்தையும், நன்மைகளையும் கொண்டதுடன் இதன் மூலம் பல விலையுயர்ந்த பாவனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதனால் மன்னார் எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், தாராபுரம் போன்ற கிராமங்களில் இருந்தும் இவ்வாறான செடிகள் மற்றும் வளங்கள் வியாபார நோக்கத்திற்காக பிடுங்கப்பட்டு வெளி பிரதேசங்களுக்கும், வெளிநாடுகளிற்கும் அனுப்பப்பட்டு வருகின்றது.
கடந்த மாதம் (14.05.2018) சில இனம் தெரியாத நபர்களால் வங்காலை கிராமத்தில் வெளி பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக சட்டவரோதமாக கற்றாலை செடிகள் பிடுங்கப்பட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பால் குறித்த முயற்சி தடுக்கப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.
தொடர்சியாக இவ்வாறான சட்ட விரோத அகழ்வுகள் இடம் பெற்று  மக்களின் முயற்சியால் தடுக்கப்பட்டாலும் சட்டவிரோத அகழ்வுகள் நின்றபாடில்லை. தொடர்சியாக இவ்வாறான சட்டவிரோத அகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து கற்றாலை செடிகள் முற்றாக  அழிந்து போகும் நிலை ஏற்படும் என்பது கசப்பான உண்மையாகும். அகழ்வு செய்யப்படும்  மருத்துவ குணம் கொண்ட கற்றாழை செடிகள் ஒரு கிலோ வெறும் 20 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இன்று கைப்பற்றப்பட்ட கற்றாலை செடிகளும் சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
SHARE