மன்னார் கடற்படை படகுகளில் சிங்கள மக்கள்

285

 

தமிழ் பிரதேசங்களில் இருந்து மன்னாருக்கு வரும் மக்கள் மன்னார் கடல் பகுதிகளுக்குச் சென்று படகு மூலம் கடலில் சுற்றிப்பார்ப்பதற்கு தொடர்ச்சியாக கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட மக்கள் உற்பட ஏனைய தமிழ் பிரதேசங்களில் உள்ள மக்கள் தாழ்வுபாடு, பேசாலை மற்றும் வங்காலை போன்ற கடற்பகுதிகளுக்குச் சென்று படகில் கடலுக்குச் சென்று கடல் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விருப்பத்துடன் செல்கின்றனர்.

ஆனால் கடற்படையினர் பல்வேறு காரணங்களை காட்டி அவர்கள் கடலில் சுற்றிப்பார்ப்பதனை தடுத்து விடுகின்றனர்.

நேற்று மாலை தமிழ் பிரதேசம் ஒன்றில் இருந்து வருகை தந்த குழுவினர் மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரைக்குச் சென்று அங்கிருந்த படகின் உதவியுடன் கடலை சிறிது தூரம் சுற்றிப்பார்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும் அங்குள்ள கடற்படையினர் பல்வேறு காரணங்களை காட்டி குறித்த குழுவினரை படகில் கடலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

பாதுகாப்புக் கவசங்களை அணிந்திருந்த நிலையிலும் குறித்த குழுவினரை படகில் சென்று சிறிது தூரம் கடலை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.

மீறி சென்றால் குறித்த படகின் அனுமதிப்பத்திரம் தடை செய்யப்படும் என படகு உரிமையாளரை கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர்.

அத்தோடு தாழ்வுபாட்டு கடற்கரையில் உள்ள கடற்படை முகாமில் கடமையாற்றும் பொது மக்கள் தொடர்பு பிரிவு கடற்படை அதிகாரி ஒருவர் அங்கு வருகை தந்த மக்களை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் தென்பகுதியில் இருந்து வருகை தரும் சிங்கள மக்களை தொடர்ச்சியாக கடற்படையினர் தமது படகுகளிலும்,கடற்கரையில் உள்ள மீனவர்களின் படகுகளிலும் ஏற்றி சுற்றிக்காட்டுகின்றனர்.

ஆனால் தமிழர்கள் என்ற காரணத்தினால் தமிழ் மக்கள் படகின் மூலம் கடலை சுற்றிப்பார்க்க கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

SHARE