எதிர்வரும் பண்டிகைக்காலங்களுக்கான வியாபார நடவடிக்கைகள் மன்னாரில் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மக்கள் எதிர்வரும் நத்தர் புதுவருட பண்டிகைகளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் நகர சபையினால் வருடா வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் வர்த்தகர்கள் வியாபார நிலையங்களை அமைத்துள்ளனர்.
உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நகர சபையினால் இம்முறை குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் குறித்த வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மன்னார் சிறுவர்பூங்கா பிரதான வீதி மற்றும் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதி ஆகிய இடங்களில் குறித்த பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
அதிகளவான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யச் செல்கின்ற போதும் அவசியமான பொருட்கள் கடந்த காலங்களை விட இம்முறை சற்று அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மன்னார் மக்கள் இதன மதம் இன்றி சகலரும் பண்டிகைக்கால வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அத்தோடு இரு குறுக்கு வீதிகள் போக்குவரத்திற்கு மன்னார் நகர சபையினால் மூடப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறுகளும் ஏற்பட்டுள்ளது.
பாண்டிகைக்கால வியாபார நிலையங்களில் கடந்த காலங்களை விட இம்முறை பொருட்கள் சற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்த நிலையில் சில வியாபாரிகளிடம் கேட்ட போது,
-பல வருடங்கலாக நாங்கள் மன்னாரிற்கு வந்து பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். மன்னார் நகர சபைக்கு நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாவுக்குள்தான் கட்டணமாக செலுத்தினோம். ஆனால் இம்முறை அப்படி இல்லை.
இம்முறை எங்களுக்கு குத்தகை அடிப்படையில் இடம் வழக்கப்பட்டது.15 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட வியாபார நிலையம் அமைப்பதற்கான ஒரு துண்டு இடம் 50 ஆயிரம் ரூபாவிற்கு பெற்றுக்கொண்டோம்.
ஒரு சில வியாபாரிகள் தரகர்கள் மூலம் இடத்தை பெற்றுக்கொண்டனர். சுமார் 40 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை தரகர்களுக்கு கட்டணமாக செலுத்தப்பட்டது.
இதன் காரணமாகவே சில பொருட்கள் கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது என வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.