மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்! நால்வரின் பெயர் பரிந்துரை

306

 

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரை தெரிவு செய்வதற்காக நால்வரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்ல உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் திடீர் சுகவீனமுற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலதிக சிகிச்சைக்காக சிங்கபூரிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக சிங்கபூரில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை அண்மையில் மீண்டும் மன்னாரிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும். மன்னார் மறைமாவட்டத்தின் கடமைகள் யாவும் குருமுதல்வர் அருட்பணி.விக்டர் சோசை அடிகளாரினாலேயே தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையிலேயே மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயரை தெரிவு செய்யும் வகையில் மூவரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி.விக்டர் சோசை, மடு தேவாலயத்தின் பரிபாலகர் அருட்பணி எமில், வங்காலை பங்குதந்தை அருட்பணி ஜெயபாலன், மன்னார் பேராலாய பங்குத்தந்தை தேவராஜா கொடுதோர் ஆகியோரது பெயர்களே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களது பெயர் பட்டியல் திருத்தந்தை பிரான்சிஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் மன்னாரின் புதிய ஆயர் எதிர்வரும் ஆனி அல்லது ஆடி மாதங்களில் பதவியேற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் அச்சமின்றி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உரிமை குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE