மலேசிய முன்னாள் பிரதமர் கைது

165

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று ஊழல் வழக்கில் பணமோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டதை அடுத்து. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார். தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

அதேபோல, கடந்த இரு மாதங்களில் நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 27.5 கோடி டொலர் என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள்,  567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்தாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், இன்று அவர் பணமோசடி தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நஜீப் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நாளை பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE