இந்தோனேஷியாவில் காணாமல் போன இளைஞர் ஒருவர் மலைப் பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த அக்பர் சலுபிரோ என்ற இளைஞர், தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். பணிக்குச் சென்ற அவர் வீட்டிற்கு திரும்பாததால், உறவினர்களும், நண்பர்களும் அவரைத் தேடி உள்ளனர்.
இந்நிலையில், அக்பரின் வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டத்தில், பெரிய மலைப் பாம்பு ஒன்று வயிறு வீங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் அந்த பாம்பின் வயிற்றை கிழித்தபோது, அதில் காணாமல் போன அக்பர், சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அக்பர் காணாமல் போன அன்று இரவு தோட்டத்தில் அழுகுரல் கேட்டதாக, அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 7 அடி நீளமுள்ள மலைப் பாம்பு மனிதனை விழுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.