மழையால் கடும் பாதிப்பு: சென்னை மக்களுக்கு மம்முட்டி – மஞ்சுவாரியர் உதவி

303

வரலாறு காணாத மழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை வெள்ளத்தில் பறிகொடுத்துவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு வெள்ளப்பகுதிகளில் பரிதவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரங்களை நீட்டி வருகிறார்கள்.

தமிழ் திரைப்பட கலைஞர்கள் நிதிஉதவி அளித்து உள்ளனர். பல நடிகர், நடிகைகள் உணவு, குடிநீர் உள்பட உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். தங்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையும் பொதுமக்கள் இலவசமாக தங்க திறந்துவிட்டுள்ளனர். இந்த நிலையில் மலையாள திரையுலக கலைஞர்களும் தமிழக மக்களின் துயர் துடைப்பு பணியில் பங்கெடுத்து உள்ளனர்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெள்ளத்தில் தவிக்கும் சென்னை மக்களின் நிலை கண்டு தான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளதாக கூறி உள்ளார். மேலும் சென்னையில் உள்ள தனது வீடு உறவினர்கள் வீடு உள்பட 20–க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கிக்கொள்ள அவர் ஏற்பாடு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தான் தயாராக இருப்பதாகவும் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அவர் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அனுப்பி இந்த நிதியை வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சென்னை மக்களுக்கு அனைவரும் உதவும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE