கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்தமை உண்மையான விடயம் என்று புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வைத்து பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்ததாக முன்னாள் கடற்படைத் தளபதி ஒத்துக்கொண்டிருப்பாகவும் ஆனால் இந்த அரசாங்கம் இல்லையென மறுத்து வருவதாகவும் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த அரசாங்கத்தில் இரகசிய தடுத்து முகாம்கள் இருந்தமை உண்மை. அதனைத்தான் முன்னாள் கடற்படைத் தளபதியும் கூறியுள்ளார். ஆனால் எமது புதிய அரசாங்கத்தில் இரகசிய முகாம்கள் எவையும் இல்லை – என்றார்.
அப்படியானால் பூஸா தடுத்து முகாமா? விளக்கமறியலா? என்று கேள்வி எழுப்பிய சுமந்திரன் எம்.பி, அது தொடர்பில் விளக்கம் கோரினார். எனினும் அரசாங்கத் தரப்பில் விளக்கம் வழங்கப்படவில்லை.