“மஹிந்த ஆட்சியில் 12,000 புலிகள் விடுதலைசெய்யப்பட்டபோது எதிர்க்காதவர்கள் – வாய் திறக்காதவர்கள் 39 சந்தேக நபர்களை தற்போதைய அரசு நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் இரு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து இணக்கப்பாட்டு அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சி முன்னெடுக்கப்படவேண்டும். குறைபாடுகளை பேசித் தீர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லும்போதுதான் அதன் சாதக, பாதகங்களை அறிந்துகொள்ள முடியும். கடந்த மஹிந்த ஆட்சியில் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் விடுதலைசெய்யப்பட்டனர். அதேபோன்று 2010 ஜனவரி 22இல் அப்போதைய சட்டமா அதிபராக இருந்த மொஹான் பீரிஸின் பணிப்பின்பேரில் கடுமையான குற்றங்கள் புரிந்த 140 விடுதலைப் புலிகள் விடுதலைசெய்யப்பட்டனர். இதன்போதெல்லாம் எவரும் எதிர்க்கவில்லை. வாய் திறக்கவில்லை; ஆனால், இன்றைய அரசு புலிச் சந்தேகநபர்கள் 39 பேரை நிபந்தனை அடிப்படையில் பிணையில் விடுதலை செய்ததை எதிர்த்து கோஷமிடுகின்றனர்; நாட்டில் இனவாதத்தைத் தூண்டுகின்றனர். இனியும் நாட்டில் இனவாதம் வேண்டாம். இரு தரப்புகளும் இணைந்து பேசி கிடைத்துள்ள பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவோம்” – என்றார்.