
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாக இரண்டு பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
கனகரட்னம் ஆதித்யன் எனப்படும் கிரிதரன் மற்றும் கந்தவனம் கோகுல்நாத் எனப்படும் இன்பன் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகள் குறித்த வழக்குகளை விசாரணை செய்யும் விசேட உயர் நீதிமன்றினால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகளின் போது முதலாம் சந்தேக நபருக்கு எதிரான சாட்சியங்களே இரண்டாம் சந்தேக நபருக்கும் பொருந்துமா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நயோமி விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 4ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.