முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவுக்கு வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரும் வெகு விரைவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மூவர் பயன்படுத்தி வாகனம் தொடர்பில் சுரேஷ் எதிரிசிங்க என்பவரினால் நிதி மோசடி விசாரணை பிரிவில் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கமைய இந்த அழைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இங்குரு கடை சந்தியில் உள்ள எதிரிவிங்க ஒட்டோகோட் நிறுவனத்தின் உரிமையாளரின் மூத்த மகனான சுரேஷ் எதிரிசிங்க அண்மையில் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நாமல் ராஜபக்சவுடனான வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே இலங்கை துறைமுக அதிகார சபையின் இயக்குனர் ஒருவரான சுரேஷ் எதிரிசிங்க அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.
தற்போதைய துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு நெருக்கமான சுரேஷ் எதிரிசிங்க கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களின் நெருங்கி நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.