ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய விஜயத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளருக்கு நட்டஈடு வழங்குமாறு இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆந்திரா மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் குணசேகரனுக்கு 20 ஆயிரம் ரூபா (இந்திய மதிப்பில்) நட்டஈட்டை வழங்க வேண்டுமென ஆந்திரா அசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தின்போது செய்தி சேகரிப்பதற்கு தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆந்திரா சென்றிருந்தனர்.
இந்நிலையில் மஹிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைத்து குறித்த ஊடகவியலாளரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நட்டஈட்டை வழங்க வேண்டுமெனவும் இந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த ஏழு மணித்தியால விசாரணைகளின் பின்னர் உத்தரவிட்டுள்ளது.