மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே இனி மீள்குடியேற்றம் – ப.சத்தியலிங்கம்

287
எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும் என வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களான கல்மடு, மறவங்குளம் பொது அமைப்புகளுக்கு அந்திம கிரியைகள் செய்வதற்கான தகரபந்தல்களை வழங்கி வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மத்திய அரசு நேரடியாகவே வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. எனினும் எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும். இந்த கிராமங்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்தியாவிற்கும் உள்ளக இடப்பெயர்விற்கும் உள்ளானவர்களை குடியேற்றிய கிராமங்களாகும்.

பலவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளதை அறிகின்றேன். இவற்றை மீள திருத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். இவ்வளவு காலமும் மத்திய அரசானது நேரடியாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக 2013ல் மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னரும் மகிந்த அரசு மாகாண சபையை புறக்கணித்தே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதிலும் குறிப்பிட்ட அரசியல்வாதிகள் தமது விருப்பு வெறுப்பிற்கேற்ற வகையில் பயனாளிகளை தெரிவு செய்தனர்.

தற்போது அரசியல் புறசூழல் சிறிதளவில் மாறியதாகவே கருதுகின்றோம். அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இனிவரும் காலங்களில் வடக்கு மாகாண சபையின் பங்களிப்புனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணித்துள்ளார்.

மீள்குடியேற்றம் தொடர்பான மாகாண கொள்ளையொன்றை தற்போது தயாரித்து வருகின்றோம். இதற்கான ஆலோசனைகளை பொது அமைப்புகளிடமிருந்தும், பொதுமக்களிடமும் பெறுவதற்கு உத்தேசித்துள்ளோம். கடந்தகால கசப்பான அனுபவங்களை புறந்தள்ளி புதியமீள்குடியேற்றகொள்கை வகுக்கப்படும். இதன்மூலம் இனமத பேதமின்றி எதிர்காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE