மன்னார் நகர் நிருபர்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் கடந்த சில மாதங்களாக குளவிகளின் தாக்கம் அதிகரித்து வந்துள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை (2) காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்களை மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் கடந்த சில மாதங்களாக குளவிகளின் தாக்கம் மற்றும் பெருக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பாடசாலை கட்டிடங்களில் சுமார் 26 குளவிக்கூடுகள் காணப்படுகின்றது.
இதனால் பாடசாலை மாணவர்கள் தொடர்ச்சியாக குளவிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர்.தற்போது வரை 8 மாணவர்கள் குளவிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு,ஒரு மாணவனக்கு 95 குளவிகள் கொட்டிய நிலையும் காணப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை நிர்வாகம் மடு கல்விப்பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்தவ பிரிவு ஆகியவற்றிற்கு முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (2) காலை பாடசாலைக்குச் சென்ற மாணவன் ஒருவர் குளவிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் பெற்றோர்களுக்கு தெரிந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச்சென்ற மாணவர்களை பெற்றோர் பாடசாலைக்குச் சென்று மீளவும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த பாடசாலையில் 284 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் மாணவர்களுக்கு பாதீப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்ட குறித்த களவிக்கூடுகளை அகற்ற அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.