மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு வேண்டுகோள்

327
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று இடங்களில் தேர்தலில் அவர்கள் பெற்ற ஆசன ஒழுங்கில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைமை நியமிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதில் அதிகப்படியான வாக்கு பெற்றவர்கள் என்றோ, சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றொ கோரப்படவில்லை. இதற்காக நியமனங்கள் கட்சிகளால் தீர்மானித்தே வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரியுள்ளது.

இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் மாவட்டங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமிக்கப்பட்ட வேண்டியுள்ளது. எப்போதும் மாவட்ட அபிவிருத்திருத்திக் குழு தலைவர் சார்பான நியமனங்கள் சிஷே;ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் 2009க்கு பின் கடந்த 5 வருட காலமாக தமது உயிரை பணயம் வைத்து முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிக்கோ, பணங்களுக்கோ அடிபணியாது தமிழ் தேசியத்தின் வெற்றிக்காக உழைத்தவர்களே தற்போதைய சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.

இவ்வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாண்புமிகு தலைவராக இரா.சம்பந்தன் ஐயா நீதி நியாயங்களின் அடிப்படையில் இவர்களுக்கே வழங்கி வைப்பார் என பொது அமைப்புக்கள், புத்தி ஜீவிகள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வேளை உண்மையிலே இவ்வாறான பதவிகள் புதிதாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு முன்பு செயற்பட்ட அனுபவம் உள்ளவர்களுக்கே வழங்கப்படுவதாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோ, ஈ.பி.எல்.ஆர்.எப், புளொட் போன்றவை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என தங்கள் கருத்துக்களை பலரிடமும் தெரிவித்துள்ளனர். இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் தங்களை அழைத்து பேசும் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.எல்.ஆர்.எப், புளொட் ஆகிய 4 கட்சிகளின் கூட்டாகும். இதன் தலைவரே இரா.சம்பந்தன் ஐயா அவர்கள். இவர் 4 கட்சிகளின் ஆலோசனையின் பேரில் தமது முடிவை எடுப்பார் என புத்தி ஜீவிகள், பொது அமைப்புக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் தற்காலத்தில் தமிழ் மக்களின் ஏகோபித்த பெரும் தலைவரான இவர் நீதி, நியாயத்தில் இருந்து தவறமாட்டார் என்பது நம்பிக்கையாகும்.

இந்தவகையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்படுதற்கான சூழல் நீதி நியாயத்தின் பிரகாரம் உள்ளதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

தமிழ் தேசியத்தை நேசிக்கும் புலம்பெயர் அமைப்புக்கள், புலம்பெயர் உறவுகளும், சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இப்பதவிகளுக்கு நியமிக்கப்படுதையே எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறான நியமனங்களுக்கு கூடிய வாக்கு பெற்றவர்களை நியமிப்பது என்று கட்சி நோக்கினால் கடந்த வடமாகாண சபை தேர்தலில் கூடிய வாக்குகளை பெற்றவர்கள் இருக்க குறைந்த வாக்குகளை பெற்றவர்கள் அமைச்சர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது கிளிநொச்சியில் மேலதிக மாகாணப் பணிப்பாளர் அரியநாயகம் அவர்கள் கூடிய வாக்குகளை பெற்றவர். யாழ்ப்பாணம் திருமதி.அனந்தி எழிலன் மிக கூடிய வாக்குகளை பெற்றவர். ஆனால் இவர்களுக்கு தலைமையால் அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.

அதேபோன்று கிழக்கு மாகாண சபையில் மட்டக்களப்பில் ஈ.பி.எல்.ஆர்.எப் கட்சியை சேர்ந்த இரா.துரைரெட்ணம் கூடிய வாக்குகளை பெற்ற போதும் அவருக்கு அமைச்சு பதவி வழங்காது அதே மட்டக்களப்பில் அவரை விட குறைவான வாக்குகளை பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களுக்கு மாகாண சபை அமைச்சர் பதவி தலைவரால் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக தமிழரசுக் கட்சியிலேயே இரண்டு பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபை அமைச்சராக உள்ளனர். இவ்வாறான அமைச்சு பதவிகளுக்கே கூடிய வாக்கு பெற்றவர்கள் நியமிக்கப்படாத நிலையில்அரசாங்க கட்சிகளின் முதிர்ந்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு அதிக வாக்கு பெற்றவர்கள் என்ற வகையில் புதியவர்களை நியமிக்க முடியாது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை முற்றாக பாதிப்பதாகவே அமையும்.

அதேவேளை அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய பட்டியல் நியமனத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை நியமிக்க கூடாது என பலரும் விரும்பிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் தோல்வி கண்டவர்களையே நியமித்தது. அவ்வாறான நிலை தோன்றுமிடத்து ஒரு கட்சியி;ன் தலைவர் தோல்வியுற்றால் அவருக்கு வழங்குவது பொருத்தமானதாகும்.

ஆனால் ஈ.பி.எல்.ஆர்.எப் தலைவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் அதில் நிராகிக்கப்பட்டமை பலரையும் வேதனைப்படுத்தியுள்ளது. உண்மையில் இத் தேசிய பட்டியல் நியமனம் தேசிய பட்டியலில் குறிக்கப்பட்ட பேராசிரியர் சிற்றம்பலம் என்பவருக்கு வழங்கப்படிருந்தால் மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும்.

மற்றைய பட்டியல் பிரதிநிதித்துவத்தை திருகோணமலைக்கு வழங்காது தற்போது உள்ளது போன்று ஒரு பெண் பிரதிநிதித்துவத்துக்கு வழங்க முடியும். ஏனெனில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெண் பிரதி நிதித்துவம் இருப்பது அவசியமாகும்.

இதுவரை நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாண சபையிலும் தற்போதைய பாராளுமன்ற தேர்தலின் பின் தேசிய பட்டியல் நியமனத்திலும் ஈ.பி.எல்.ஆர்.எப் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பலரினதும் கருத்துக்கள் மேலோங்கி வரும் நிலையில் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும் தலைவரும் இக்கூட்டமைப்பின் சார்பில் தற்போதைய இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் தனியே ஒரு கட்சியின் சார்பில் முடிவை மேற்கொள்ளாது சிறந்த ஜனநாயகத்தை பேணி ஏனைய மூன்று கட்சிகளில் தலைமைகளின் ஆலோசனையையும் செவிமடுத்து நீதி தவறாது அனைத்து பங்காளிக் கட்சிகளுக்கும் நியாயம் வழங்கும் வகையில் தமது தீர்மானத்தை எடுக்க முன்வர வேண்டும் என பொது அமைப்புக்கள், புத்தி ஜீவிகள் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஐயா அவர்களை வேண்டுகின்றனர்.

எமது இனத்தின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பாதையில் செல்லும் எமது தலைவர் தமது பங்காளிக் கட்சிகளின் ஜனநாயக உரிமையை வழங்குவதும் அவசியமாகும்.

ஏனெனில் இந்நாட்டில் எம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்று அவர்களை நிம்மதியாக வாழச் செய்யும் முகமாக தாங்கள் மேற்கொள்ளும் இராஜதந்திர நகர்வில் கட்சிகள் பிளவுபடாதவாறு அவர்களுக்குரிய அதிகாரங்களை வழங்கி அவர்களையும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்பதே சிறந்த தலைவரின் பண்பாகும்.

இதனடிப்படையில் இன்று நீதி நியாயத்தை கோரி எமது மக்களுக்காக உழைக்கும் எமது தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் தமது பங்காளி கட்சிகளின் உரிமைகள் பாதிக்கப்படாதவாறு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவிகளை சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்க முன் வரவேண்டும் என்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் சார்பில் பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள் வேண்டுகின்றனர்.

SHARE