மாவீரர் வாரத்தை நினைவு கூர்ந்த நகரசபை உறுப்பினர்கள்

142
மன்னார் நகர் நிருபர்
 
தமிழ் மக்களின் விடுதலைக்காக  உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் வாரம் இன்று  21 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகியுள்ளது.
அவர்களை இந்த இடத்திலே நினைவு கூற வேண்டியது எமது கடமை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
-மன்னார் நகர சபையின் 9 ஆவது அவர்வு  இன்று புதன் கிழமை(21) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மாவீரர்கள் என்பவர்கள் தங்களுக்காகவும்,தமது குடும்பங்களுக்காகவும் உயிர் நீத்தவர்கள் இல்லை. எமது மண்ணுக்காகவும், எமது மக்களுக்காகவும் உயிர் நீத்தவர்கள் அந்த மாவீரர்கள். அவர்கள் மக்களையும் மண்ணையும் நேசித்தவர்கள்.
அவர்கள் இரவு பகல் பாராது  மழை,வெயில் என்று சோராது கள முனைகளிலே போரீட்டு எமது மக்களுக்காக உயிர் நீத்தவர்கள். அவர்களை இந்த இடத்திலே நினைவு கூற வேண்டியது எமது கடமை.
மேலும் நாட்டிலே அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.எமது நாட்டில் தற்போது இரண்டு பிரதமர்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள். பாராளுமன்றம் ஒரு கேலிக்கூத்தாக அங்கே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒரு உயரிய சபையிலே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாமல் அங்கே அமர்வுகள் இடம் பெற்று வருகின்றது.
எனினும் எமது மன்னார் நகர சபையிலே நாங்கள் எமது சபையூடாக ஈட்டப்படுகின்ற வருமானத்தை வைத்து அதனூடாக எமது மக்களுக்கு சேவை செய்து வருகின்றோம்.
தொடர்ச்சியாகவும் மக்களுக்கான சேவையை செய்வோம் என கூறிக்கொள்ளுகின்றேன் என தெரிவித்து தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து பல உறுப்பினர்கள் எகமனதாய் இன்னூயிரை ஈந்த மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.
SHARE