மிகச் சொற்ப வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்த அருந்தவபாலனுக்கு தேசியப்பட்டியல் மூலம் இடம் வழங்க வேண்டும்

333

 

மிகச் சொற்ப வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்த தென்மராட்சி வேட்பாளர் திரு.க.அருந்தவபாலனுக்கு தேசியப்பட்டியல் மூலம் இடம் வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் செயலாளரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசாவிடம் தென்மராட்சி பொதுஜன அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அத்துடன் கூட்டமைப்பின் தலைவருக்கான வேண்டுகோள் மகஜரையும் அவர்கள் மாவை சேனாதிராசாவிடம் கையளித்தனர்.

வேட்பாளர் அருந்தவபாலனின் அதிசயக்கத்தக்க இறுதி நேரத் தோல்வி அறிவிப்பு தென்மராட்சி மக்களிடையே பெரும் கவலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பொது அமைப்புக்கள் ஒன்று திரண்டு தமது உணர்வலைகளை வெளிப்படுத்தினர். தென்மராட்சி மண்ணின் உணர்வுகளுக்கு கூட்டமைப்பின் தலைவர்களும், கட்சிகளும் மதிப்பளிக்க வேண்டுமென அவர்கள் வேண்டிக் கொண்டனர்.

கிழக்கு மாகாண மக்கள் இடம் பெயர்ந்து வந்தது முதல் வடமராட்சி வலிகாமம் என இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த போது அவர்களைத் தாங்கித் துயர் துடைத்த மண் தென்மராட்சி. இறுதியாக தாமே இடம்பெயர்ந்து இடர் சுமந்து மீள் குடியேற்றத்தின் பின் பலவேறு தேவைகளையும் ஈடு செய்ய வேண்டிய அவசியம் இம் மண்ணுக்கு உண்டு.

எனவே தென்மராட்சி மண்ணிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம், தென்மராட்சி முதியோர் பேரவை, தென்மராட்சி அதிபர்கள் சங்கம், தனியார் கல்வி நிலைய ஒன்றியம், ஆட்டோ சங்கம், சனசமூக நிலையங்களின் சமாசம், தென்மராட்சி பாடசாலைகளின் ஆசிரியர் சங்கங்கள், தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம், போன்ற இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் தமது கோரிக்கையை கூட்டமைப்புக்கு தெரியப்படுத்தினர்.

கூட்டமைப்பின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் தமது வேண்டுகோளை சாக்குப் போக்குகள் கூறித் தட்டிக் கழிக்காமல் நிறைவேற்றித் தரவேண்டும் என அங்கு உரையாற்றிய பலரும் தெரிவித்தனர்.

தம் கோரிக்கை தொடர்பாக தம்முடன் கலந்துரையாடும் முன் தேசியப்பட்டியல் தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டாம் என்ற தாழ்மையான கோரிக்கையை மாவை.சேனாதிராசா மூலம் தலைவர் சம்பந்தனுக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

arunthavapalan11

SHARE