அடையாளம் சிவில் அமைப்பு மற்றும் தாமரைக்குளம் பதிவர் சங்கம் இணைந்து நானுஓயா நாவலர் கல்லூரியில் நடாத்திய மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியின் மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணத்தை கொட்டக்கலை ஜி.ரி.சி மகளிர் அணி வெற்றிகொண்டதுடன் இரண்டாம் இடத்தை நானுஓயா தாஜ்மஹால் அணியும் மூன்றாம் இடத்தை நுவரெலியா மிஸ்றோ சுப்பர் கிங்ஸ் அணியும் பெற்றுக் கொண்டன.
முதலாம் இடம்பிடித்த அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10,000 ரூபா பணம் பரிசும் இரண்டாம் இடம்பிடித்த அணிக்கு 7500 ரூபா பணம் பரிசும் வெற்றிக் கிண்ணமும் மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 5000 ரூபா பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இந்த கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு நிகழ்வில் மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் எழுதி வௌியிட்ட‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை‘ என்ற புத்தகம் இளைஞர் யுவதிகள் மத்தியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அடையாளம் அமைப்பின் செயலாளர் பழனி விஜயகுமார் மூலம் நானுஓயா நாவலர் கல்லூரி நூலகத்திற்கு ஒரு தொகை புத்தகங்கள் நினைவு பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. கல்லுரியின் உபஅதிபர் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.
மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் தொடராட்ட நாயகியாக ஜி.ரி.சி அணியின் வீராங்கனை கீதா தெரிவுசெய்யப்பட்டதுடன் அவருக்கு கிண்ணமும் 3000 ரூபா பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. இறுதிப் போட்டியின் நாயகியாக ஜி.ரி.சி அணியின் வீராங்கனை சுபா தெரிவு செய்யப்பட்டார்.
இம்முறை போட்டியில் கொட்டக்கலை ஜி.ரி.சி அணி, கொட்டக்கலை ரி.ரி.சி அணி, நானுஓயா தாஜ்மஹால் அணி, டெஸ்போர்ட் ரெட்ரோஸ் அணி, கேம்பிரி மேற்பிரிவு கூகுல் அணி, நுவரெலியா மிஸ்றோ சுப்பர் கிங்ஸ் அணி, கிறேட்வெஸ்டன் ஏ,பி அணியினர், செம்மொழி மன்றம் அணி மற்றும் புளியாவத்தை போடைஸ் அணி ஆகியன பங்குபற்றியதுடன் அனைத்து அணிகளுக்கும் நினைவுக் கிண்ணம் மற்றும் பஞ்சம் பிழைக்க வந்த சீமை புத்தகம் என்பன பரிசாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






