மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் கத்திகள், பொல்லுகளுடன் நின்று மக்களை மிரட்டும் திருட்டுக் கும்பல்!

290

 

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள பொருள்களை திருடிச் செல்வதில் ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுகின்றபோதிலும் இதனை கட்டுப்படுத்த பொலிஸாரோ அரச அதிகாரிகளோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். காணிகள் விடுவிக்கப்பட்ட முதல் நாளே அங்கு சென்ற திருடர்கள் இராணுவத்தினர் கைவிட்டு சென்ற வீடுகளில் இருந்த ஓடுகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றைத் திருடிச் செல்லமுற்பட்ட நிலையில் அவர்களை காங்கேசன்துறை பொலிசாரிடம் வலி.வடக்கு பிரதேச செயலாளர், பிரதேச சபையின் முன்னாள் தலைவர், கிராம அலுவலர்கள் ஆகியோர் ஒப்படைத்திருந்த போதிலும் அவர்கள் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்காது கைவிட்டுச் சென்றுள்ளார்கள். இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக தற்போது காணிகளில் உள்ள வீடுகளின் உடமைகளை திருடுவதுடன் பெறுமதி மிக்க மரங்களையும் கூட வெட்டிச் செல்லும் நிலமையும் காணப்படுகின்றது. இதனை தட்டிக் கேட்கச்செல்லும் பொது மக்களை அந்தக் கும்பல் கத்திகள் பொல்லுகள் மற்றும் கோடாரிகளுடன் நின்று பயமுறுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள். மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பிரிவுகளின் கிராம அலுவலர்களின் அனுமதி இன்றி யாரும் குறிப்பிட்ட பிரதேசத்தினுள் நுழையமுடியாமல் தடை செய்வதுடன் எந்தவொரு பொருளையும் எடுத்து செல்வதாயின் கிராம அலுவலரின் அனுமதிக்கடிதம் பெறவேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதன் மூலம் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெறக் கூடிய திருட்டுக்களை தடுத்து நிறுத்துவதுடன் தேவையற்றவர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தலாம் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். –

SHARE