இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல். இதற்கு மன அழுத்தம், சத்துக்கள் குறைவு, பொடுகுத் தொல்லை என பல காரணங்கள் இருக்கலாம். முடி உதிர்வது நிற்க ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகள், கண்டிஷனர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே கிடைக்கும் கற்றாழையை கொண்டு எண்ணெய் தயாரிக்கலாம். கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம்.
ஆனால் கற்றாழை எண்ணெய் தயாரித்து வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், மூன்றே மாதங்களில் தலைமுடி நன்கு வளர்ந்திருப்பதைக் காணலாம்.
கற்றாழை இலை – 2
தேங்காய் எண்ணெய் – 50 மிலி
முதலில் கற்றாழை இலையை தோல் சீவி உள்ளே உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி எடுக்கும்போது அதில் உள்ள மஞ்சள் நிற பகுதியை தப்பித்தவறியும் எடுத்துவிட வேண்டாம். ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10-15 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.
பயன்படுத்தும் முறை :-
கற்றாழை எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடைந்து, முடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.