வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எந்த நிகழ்விற்கு அழைப்பு விடுத்தாலும் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றாரே தவிர எந்தவொரு நிழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை என தென்மாகான முதலமைச்சர் ஷான் விஜேலால் கவலை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எந்தவொரு நிகழ்விற்கும் அழைப்பு விடுப்பதில் பலனில்லை. அவர் தனக்கு விடுக்கப்படுகின்ற அழைப்புக்களை ஏற்றுக்கொள்கின்ற போதிலும் எந்தவொரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை.
இதுபோலவே கடந்த மாகாண முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுத்திருந்ததுடன் அதனை அவர் ஏற்றுக்கொண்டிருந்த போதும், சுகயீனம் காரணமாக தனக்கு அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார். விக்னேஸ்வரன் இவ்வாறு பல நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை ஏற்றுக்கொண்டு வராமல் இருப்பது கவலைக்குரியது.
இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் காலியில் நடைபெறவுள்ளதுடன், இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக் கூறிக்கொண்டு சிலர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
யார்? எவ்வாறு எந்தக் கூட்டத்திற்கு சென்றாலும், காலியில் இடம்பெறவிருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் வெற்றிகரமாக இடம்பெறும்’ என்றும் கூறினார்.