வடக்கு,கிழக்கில் உள்ள யுத்த சின்னங்கள் அகற்றப்படவேண்டும்.வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் இந்தக் கோரிக்கை நியாயமானது என்று தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள யுத்த சின்னங்கள் அகற்றப்படவேண்டும். இதன்மூலமே உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த கோரிக்கை தொடர்பில் கருத்து கேட்டபோதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வடக்கிலுள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். இந்த செயற்பாடு தென்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் கோரியதைப்போன்று வடக்கு, கிழக்கிலிருந்து யுத்த நினைவு சின்னங்கள் அகற்றப்படவேண்டும். அதுவே எனது நிலைப்பாடுமா கும். இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் யாருக்கு எதிராக யுத்தம் புரிந்தனர்? இந்தியாவிற்கு எதிராகவா? அல்லது மாலைதீவுக்கு எதிராகவா? அல்லது பாகிஸ்தானுக்கு எதிராகவா யுத்தம் புரிந்தனர்? இல்லை.அது உள்நாட்டு யுத்தமாகும்.அன்று ஜே.வி.பி.க்கு எதிராக இராணுவத்தினர் யுத்தம் செய்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். இறுதியில் ஜே.வி.பி. தலைவர் ரோகன விஜயவீரவை கொன்றனர். அன்று வெற்றியை கொண்டாடினர்.
ஆனால் அதற்காக தெற்கிலே நினை வுச்சின்னங்கள் இருக்கின்றனவா? இல்லையே அவ்வாறாயின் வடக்கில் நினைவுச்சின்னங்களை நிறுவுவது எந்த வகையில் நியாயமாகும் என்றார்.