முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, வட மாகாணசபையை செயற்திறன் மிக்கதாக மாற்றுவாரா விக்னேஸ்வரன்..? – விஸ்வா

336

 


CMவடமாகாண சபையின் செயற்பாடு போதாது; அது செயற்திறனற்று இயங்குகிறது என்கின்ற குற்றசாட்டு வட மாகாணசபையின் எதிர்கட்சியினரால் மட்டும் சுட்டிக்காட்டப்படுவதாக இல்லாமல், உட்கட்சிக்குள்ளேயும் இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வட மாகாணசபை ஏற்படுத்தப்பட்டு இரு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இதற்கான பொறுப்பை முதலமைச்சரே ஏற்க வேண்டும்.

குறிப்பாக, வட மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி கூட சரியாக பயன்படுத்தப்படுவதில்லை என்கிற குற்றசாட்டு முன்வைக்கப்படுகின்றது. இவ்வருடம் நிறைவடைய இன்னமும் ஒரு மாதமும் சில நாட்களுமே உள்ள நிலையில், இவ்வருடத்திற்கான நிதியில் 38 வீதமானவை இன்னும் செலவு செய்யப்படவில்லை என்று வட மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா கூறுகின்றார்.

அத்துடன், வட மாகாணசபை அமைச்சர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டங்களுக்கே முன்னுரிமை வழங்கி செயற்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. வட மாகாணசபை என்பது வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,  மன்னார் என்பனவற்றை உள்ளடக்கியுள்ள நிலையில், வட மாகாணசபையின் அமைச்சர்கள் அவ்வாறு செயற்படுவதில்லை என முல்லைத்தீவைச் சேர்ந்தவரான வடமாகாணசபை உறுப்பினரும், பிரதி அவைத் தலைவருமான ம.அன்ரனி ஜெகநாதன் முன்னர் கண்டித்திருந்தார். வட மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறு அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு கடந்த செப்ரெம்பர் மாதம் கடிதங்களையும் அனுப்பியிருந்தார்.

வட மாகாணசபை அமைந்ததன் பின்னர் அதன் மூலமாக ஏதேனும் பயன்கிட்டும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு- குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை. அதற்கு முதலமைச்சரால் கூறப்பட்டு வந்த காரணம் வட மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதேயாகும். மாகாண ஆளுநர் எல்லாவற்றிற்கும் தடையாகவுள்ளார் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 8ம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆளுநர் மாற்றப்பட்டார். தொடர்ந்து, முழுமையாக இல்லாவிடினும் குறிப்பிட்ட சில அதிகாரங்கள் வட மாகாணசபைக்கு வழங்கப்பட்டன. இதனை முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார். “இப்போதுதான் படிப்படியாக வட மாகாணசபைக்கான அதிகாரங்கள் வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றன” என அவர் பொது நிகழ்வுகளில் உரையாற்றுகையில் தெரிவித்திருக்கின்றார். அதே வேளை, இப்போது ‘அதிகாரம்’ தொடர்பில் அதிகம் எதனையும் முதலமைச்சர் குறிப்பிடுவதில்லை.

நீதியரசராக இருந்தவர், சட்டம் தெரிந்த ஒருவர் என்ற வகையிலும், ஆன்மீகவாதி என்ற வகையிலும் சி.வி விக்னேஸ்வரன் முதலமைச்சராக வந்தமை மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. பல வருட காலமாக தமிழ் அரசியல்வாதிகளைப் பார்த்தும் அவர்களது பேச்சுக்களை கேட்டும் சலித்துப்போன தமிழ் மக்களுக்கு விக்னேஸ்வரனது புதுவரவு புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியதில் தவறில்லை.

அவர் தேர்தலில் வெற்றி பெற்றதும் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவியேற்றார். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பலருக்கு பிடிக்காவிட்டாலும் மக்களில் பலர் இதனை வித்தியாசமான அணுகுமுறையாவே பார்த்தனர். ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தி, ஒரு இணக்க அரசியலுக்கூடாக பகைமையற்ற சூழலை இது உருவாக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சரிவரவில்லை.  எனவே, மஹிந்த ராஜபக்ஸவையும் அவரது அரசாங்கத்தையும் பின்னர் கடுமையாக விமர்சிக்கும் நிலைக்கு விக்னேஸ்வரன் தள்ளப்பட்டார்.

வட மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியோருடன் முரண்பட்ட முதலமைச்சர் அவர்களை மாற்றுமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் பல தடைவைகள் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முதலில் செய்வதாக கூறிவிட்டு பின்னர் அதனை மஹிந்த கைவிட்டுவிட்டார். இது விக்னேஸ்வரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “மனங்குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதனை மறுதலிப்பது என்பது தான் மஹிந்த ராஜபக்ஸவின் குணம்” என்று அப்போது மஹிந்தவை அவர் விமர்சித்தார். இவ்வாறு, மஹிந்த அரசின் மீது ஒட்டுமொத்த நம்பிக்கையும் இழந்த நிலை அவருக்கு ஏற்பட்டது.

ஆட்சி மாறியதும் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதிகம் உள்ளுக்குள் தான். புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர், வட மாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை ஒரு அவசரப்பட்ட நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அதனைத் தொடர்ந்து அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் முரண்பட்டுக் கொண்டார். இப்போது, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடன் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டு, தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சிந்தனைகளில், வட மாகாணசபையின் செயற்திறனை எவ்வாறு அதிகரிப்பது என்பதை விடவும், உள்ளே இருந்து வரும் எதிர்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது? என்ன மறுப்பை வெளிப்படுத்தவது? என்பதே முக்கியமானதாக உள்ளதாக தெரிகின்றது. அதற்கு ஒரு உதாரணமாக சுமந்திரனுக்கு அவர் அளித்துள்ள நீண்ட பதிலை குறிப்பிடலாம்.

அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள பல விடயங்கள் முரண்பாடானவையாகவே உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக குறிப்பிடுவது அவசியமற்றதெனினும், தான் எவ்வாறு வடமாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார் என்பதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் தவறானது என்பதை இங்கு அழுத்தமாக குறிப்பிட வேண்டும்.

“என்னைப் பொறுத்த வரையில் வடமாகாண மக்களே பெருவாரியாக எனக்கு வாக்களித்தனர். அவர்களே, எனது கட்சி. அவர்களின் நன்மையே எனது கட்சிக் குறிக்கோள். ஆகவே கட்சியே எனக்குப் பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும்” என இப்போது விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தனின் முயற்சி இல்லாதிருந்தால் அவர் முதலமைச்சராக வந்திருக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

விக்னேஸ்வரனை முதலமைச்சராக கொண்டு வருவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் நீண்ட உரையாடல்களை சம்பந்தன் அப்போது நடத்தினார். கட்சித் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார், அப்போது சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தார். அவர் தலைமை வகித்த கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டன. மாவை சேனாதிராஜாவையே முதலமைச்சராக்க வேண்டும் என கட்சிக்குள் இருந்தவர்கள் கோரினார்கள். சம்பந்தனின் முடிவை எதிர்த்து, ‘வடக்கின் தமிழரசுக் கட்சி’ என்ற பெயரில், அறிக்கைகளும் யாழ்ப்பாண உதயன் பத்திரிகையில் வெளியாகின. பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்தே சம்பந்தன் விக்னேஸ்வரனை கொண்டுவந்தார். சம்பந்தனின் நம்பிக்கைக்கு உரியவராக செயற்படும் எம்.ஏ. சுமந்திரனும் இந்த முயற்சிக்கு சம்பந்தனுக்கு தோள்கொடுத்தார் என்பதையும் மறுக்க முடியாது.

முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவதில் விருப்பமில்லை என்று முதலில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த விக்னேஸ்வரன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைத்துக் கடசிகளும் ஒருமித்து சம்மதம் தெரிவித்தால் வருவேன் என்று கூறினார். இந்த சம்மதம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சம்பந்தனே ஆகும்.

டெலோ, ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகிய கட்சிகள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகவே செயற்பட வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டிருந்தன. ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள  இந்த கட்சிகள் முன்னர், ஆயுத இயக்கங்களாக இருந்ததால் அவை இரத்தக்கறை படிந்தவை என்றும், அதனால் தான் தமிழரசுக் கட்சி சார்ந்தே தான் இருப்பதாகவும் கூறி, குறித்த கட்சிகளுடனும் விக்னேஸ்வரன் முரண்பட்டார். இப்போது, சுமந்திரனுக்கு எழுதிய கடிதத்தில், தான் எந்தவொரு கட்சியையும் சாராதவன் என்று குறிப்பிடுகின்றார்.

வடக்கின் அரசியலிலும், நிர்வாகத்திலும் தோன்றியிருக்கும் இந்த உள்முரண்பாடுகளால் தமிழ் மக்களுக்கே பாதிப்பு அதிகம். இதனை வடமாகாண முதலைமைச்சர்  புரிந்து கொள்ள வேண்டும். முரண்பாடுகளை மூட்டைகட்டி வைத்து விட்டு வடமாகாணசபையை செயல்திறன் மிக்கதாக மாற்ற முழு முயற்சிகளையும் அவர் அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.    செய்வாரா..?

SHARE