வன்னேரிக்குளம் பல்லவராயன்கட்டு பிரதான வீதியின் புனரமைப்புப்பணிகளை 26-09-2016 திங்கள் மாலை 2.30 மணியளவில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்.
குறித்த வீதியானது மன்னார் யாழ்ப்பாணம் (A32) பிரதான வீதியோடு இணைக்கப்படும் ஒரு வீதி என்பதோடு, கடந்த வருடம் மார்கழி மாதம் மண்டைக்கல்லாறு பகுதி வெள்ளம் காரணமாக மன்னார் யாழ்ப்பாணம் போக்குவரத்து தடைப்பட்டிருந்த அந்த காலப்பகுதியில் குறித்த வீதியினூடாகவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான பயணத்தை மக்கள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கவிடயம், அந்த சமயத்தில் அமைச்சர் டெனிஸ்வரன் குறித்த இவ்வீதி வழியாக சென்று மக்களோடு கலந்துரையாடிய வேளையிலே மக்களது முறைப்பாட்டிற்கு அமைவாக வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான குறித்த வீதியை 2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 06 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கு குறித்த வீதியின் 532 மீட்டர் தூரத்தை பாடசாலை, வைத்தியசாலை மற்றும் மக்கள் பாவனை அதிகமாகவுள்ள பகுதியை தார் வீதியாக போடவும், அதிகமாக நீர் வீதிக்கு குறுக்கே வழிந்தோடும் இரண்டு இடங்களை இனங்கண்டு அந்த இடங்களில் 02 மதகுகள் அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார், இவ்வாறு இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டங்களில் தற்போது வீதியானது 90% நிறைவடைந்துள்ளதுடன், குறித்த மதகுகள் அமைக்கும் பணியும் ஓரிரு வாரங்களுக்குள் நிறைவடையவுள்ளது. இத்தருணத்தில் திட்டத்தை நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார் அமைச்சர்.
குறித்த இடத்தை நேரடி விஜயம் செய்து பார்வையிட்ட அமைச்சர் டெனிஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2120 கிலோமீட்டர் வீதிகள் உள்ள நிலையில் அதில் ஏறத்தாழ 400 கிலோமீட்டர் வீதிகளே இதுவரை ஒதுக்கப்பட்ட நிதிகளினூடாக புனரமைக்கப்பட்டு பாவனைக்கு உகந்தவையாக காணப்படுவதாகவும், அந்த வகையிலே ஏனைய வீதிகள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படவுள்ளதாகவும், குறிப்பாக எதிர்வரும் வருடம் ஐ ரோட் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூராட்சி மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதிகள் அடங்கலாக தலா 200 கிலோமீட்டர் வீதம் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அத்திட்டத்தில் குறித்த வன்னேரிக்குளம் பல்லவராயன்கட்டு பிரதான வீதியும் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இப்பிரதேச மக்களுக்கு தெரிவிப்பதில் தாம் மகிழ்வடைவதாகவும், ஐ ரோட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் மாகாணத்தில் பெருமளவு வீதிகள் புனரமைக்கப்பட்டுவிடும் என்று மகிழ்வோடு தெரிவித்ததார்.
அத்தோடு மாகாணத்தில் அனைத்து அமைச்சுக்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அவை செலவு செய்யப்படாமல் திரும்புகின்ற அபாயமான நிலை இருப்பதாகவும் பல அரசியல் கட்சிகளும் தற்போது கருத்துக் கூறிவரும் நிலையில், எது எவ்வாறு இருப்பினும் அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதிகளை சரியானதாகவும், மக்களுக்கு பயனுள்ள வகையிலும் செலவு செய்யவேண்டுமெனில் குறித்த துறைகள் சார்ந்த அமைச்சர்கள், திட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு விஜயம் செய்து அவற்றை தொடர்ந்து மேற்பார்வை செய்வதனூடாகவே அங்குள்ள பிரச்சினைகளை இனம்கண்டு விரைவாக குறித்த காலத்தினுள் திட்டங்களை நிறைவு செய்து மக்களது பாவனைக்கு கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.


