அன்போடு வளர்க்கப்பட்டு, பாடசாலைக்குச் சென்ற 17 வயது மாணவி வித்தியா கடத்தப்பட்டு, பலரால் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு, மிருகத்தனமாக முறையில் கொலை செய்யப்பட்ட அப்பாவி மாணவியின் வீட்டாருக்கு, சம்பிரதாயங்களை மீறி அமைச்சர்கள் எவரின் உதவியுமின்றி, தன்னந்தனியாக யாழ்ப்பாணம் சென்று, நேரில் தன் சார்பிலும், தன் அரசு சார்பிலும் அனுதாபம் தெரிவித்து வந்த மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் செயற்பாட்டை, வெகுவாக நாட்டு மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்.
எமது காலத்தில் நடந்தேறிய குற்றச் செயல்களில் அதிகளவிலான, கொடூரமான செயல் இதுவாகும். நாட்டுமக்கள் இன, மதபேதமின்றி சகல துறைகளையும் சேர்ந்தவர்கள், பல்வேறு வயதுடைய ஆண், பெண் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரும் நாடளாவிய ரீதியில் கிளர்ந்தெழுந்து தமது ஒற்றுமையையும், ஆதங்கத்தையும் இந்த கொடூர செயல்களான கடத்தலோடு கூடியபலரின் வன்புணர்வு, படுகொலை ஆகியவற்றை பலவகையான செயற்பாடுகள் மூலம் வெளி உலகிற்கு எடுத்துக்காட்டினர். இனமதபேதமின்றி, நாட்டவர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டமை, உலகநாடுகளாலேயே நம்பமுடியவில்லை. வித்தியா நம் நாட்டு பாடசாலை பிள்ளைகளுக்கு அக்காவாகிவிட்டார். தற்போது அவர் பற்றிப் பேசும் போது அக்காவெனவே குறிப்பிடுகின்றனர்.
துரஷ்டவசமாக தற்போது அவர் எம் மத்தியில் இல்லாதபோதும் எமது பெண் பிள்ளைகளுக்கு தன் உயிரை அர்ப்பணித்து இன, மதபேதமின்றி அவர்களுக்கு ஓர் சிறந்த வழிகாட்டியாகிவிட்டார். மேலும் எமது நாடு பூராவும் பரந்துவாழும் ஆண் பெண் பிள்ளைகள், பெரியவர்கள் வித்தியா மீது காட்டும் அனுதாபங்கள் அவரை முழு இலங்கைக்கும் ஓர் ஒற்றுமையின் சின்னமாக எடுத்துக்காட்டுகின்றது. அவரை ஓர் தியாகியாக ஏற்றுக்கொண்டால்கூட மிகையாகாது. எமது நாட்டிற்கு மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேனவை இலங்கை மக்கள் நம்பிக்கைவைக்கக் கூடிய ஓர் சிறந்த தலைவராக அடையாளம் காட்ட உதவியவர் வித்தியா. எல்லாவற்றுற்கும் மேலாக பெண்பிள்ளைகளுக்கு வேம்படியில் கொடுத்த உறுதிமொழியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவமுன்வந்தமையும் ஜனாதிபதி பற்றிய எமது கருத்துக்களுக்கு மேலும் வலுச்சேர்க்கின்றன.