அரசாங்க தகவல் திணைக்களம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார செலவுகளைப் பொறுப்பேற்றிருந்தது.
அதன் முன்னைய தலைவர் ஆரியரத்ன எதுகல மற்றும் பிரதிப் பணிப்பாளர் வசந்தப்பிரிய ராமநாயக்க ஆகியோர் அரச திணைக்கள விதிகளை மீறி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கான அச்சிடல் மற்றும் ஊடக செலவுகளை தகவல் திணைக்களத்தின் ஊடாக வழங்கியிருந்தனர்.
இதற்காக அவர்கள் பாரிய தொகைகளுக்கு பற்றுச்சீட்டுகளை இணைத்து கட்டணங்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் குறித்த பற்றுச்சீட்டுகளில் எஞ்சியிருந்தவற்றின் கட்டணங்கள் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் முன்னொரு காலத்தில் மஹிந்தவின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்ட வசந்தப்பிரிய ராமநாயக்க இப்போது மைத்திரியின் ஊடகப்பிரிவுடன் இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளார்.
இதனை சாக்காக வைத்து மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கான செலவினங்களின் நிலுவைத் தொகையை பெற்றுக் கொள்ள வசந்தப்பிரிய ராமநாயக்க கடும்முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
எனினும் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திருமதி தர்சனி குணதிலக்க அதற்குத் தடையாக செயற்படுகின்றார்.
இந்நிலையில் ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில் தகவல் திணைக்களத்துக்கு அடாவடியாக வருகை தந்திருந்த ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக்க , தர்சனி குணதிலக்கவை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார். மேலும் வசந்தப்பிரியவின் கொடுப்பனவுகளை தாமதமின்றி செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரது அதிகாரிகள் மேற்கொண்ட இவ்வாறான அடாவடிகளே மஹிந்த ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பைவிதைத்ததை மறந்து மைத்திரியின் அதிகாரிகள் செயற்படத் தொடங்கியுள்ளமை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.