நல்லாட்சியில் எனக்கூறுகின்றபோது நாம் இதில் பெரிதாக எதனையும் சாதித்துவிடவில்லை. அதற்குமாறாக சிங்கள பேரினவாதக்கட்சிகள் எமது அரசியல் தீர்வுத்திட்டத்திற்கு முரணான செயற்பாடுகளையே மேற்கொள்கின்றார்கள். மாகாணசபைக்கு இருக்கக்கூடிய பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் கூட இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனை நல்லாட்சி என எவ்வாறு கூறுவது. இருப்பினும் ஒரு விடயம் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த ஆட்கடத்தல்கள் அதாவது கணிசமானளவு வெள்ளைவேன் கடத்தல் சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்றது இனப்படுகொலைதான் என வடமாகாண சபையில் உத்தியோகபூர்வமாக பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் அது இனப்படுகொலை அல்ல என அரசு விவாதிக்கிறது. இதனைவிட இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயம் எனக்கூறிக்கொண்டு தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டுள்ளதோடு இவ்விடயம் அவர்களின் வாழ்வைப்பாதிக்கும் வகையில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. தமது தேசிய அரசியலை அடிப்படையாகக்கொண்டே தற்போது இந்த மைத்திரி-ரணிலின் கூட்டாட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. வேகவேகமாக தமிழர் விவகாரம் ஐ.நா சபையில் பேசப்பட்டபோதும் அதனை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதய சுத்தியுடன் இந்த அரசு இதுவரையிலும் செயற்படவில்லை என்பதுவும் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு ஆட்சிக்குவந்து முடிவடைந்த காலங்களும் அதனையே எடுத்துக்காட்டுகின்றது.