மைத்திரி அறியாமல் செய்த தவறை சுட்டிக்காட்டும் ஆங்கில ஊடகம்

355
புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியை பொறுப்பேற்கும் போது முன்னாள் ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு பதிலாக தனக்கு விசுவாசமான, மிகவும் நெருங்கிய ஒருவரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவது வழமையான ஒரு விடயம்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு மாறாக செயற்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் இராணுவ பாதுகாப்பு பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டது என இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்ததுடன், நிர்வாக நோக்கம் கருதியே ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கலைக்கப்பட்டது என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு தலைவர் கேர்ணல் மகேந்திர பெர்ணான்டோவிடம் இராணுவ சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டமொன்றில் இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியொன்றுடன் வந்த சம்பவம் தொடர்பிலேயே மகேந்திர பெர்ணான்டோ விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான இராணுவப்பிரிவு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பை வழங்கவில்லை.

அதாவது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை உள்ளிட்டவையின் பெயரில் பொலிஸ் பிரிவு பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்பட்டது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவியேற்ற போது ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவிலிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை கலைத்துவிட்டு அவர்களுக்கு பதிலாக இராணுவத்தினரை இணைத்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலத்தில் அவரது மகனான ரவி ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், ஐக்கிய தேசிய கட்சியின் துணை ஆயுதப்படையாக, விசேட அதிரடிப் படை உருவாக்கப்பட்டதன் காரணமாகவே சந்திரிக்கா தனது காலத்தில் விசேட அதிரடிப் படையை அகற்றி அதற்குப் பதிலாக இராணுவ வீரர்களை நியமித்திருந்தார்.

சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட விசேட அதிரடிப் படையினர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாதுகாப்பிற்காக முதல் வரிசையில் நியமிக்கப்பட்டனர்.

குறித்த படையினர் அதன் பின்னர் ஜனாதிபதிகளாக பதவியேற்ற ஆர்.பிரேமதாச, மற்றும் டி.பி.விஜேயதுங்க ஆகியவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பாளர்களாகச் செயற்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புத் தொடர்பில் திருப்தி ஏற்படாத காரணத்தினால் ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவை அமைத்தார்.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே தனக்கான பாதுகாப்பை வழங்கிய ஜனாதிபதி செயலகப் பாதுகாப்பு பிரிவின் மீது தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

மகிந்த அரசாங்கம் இப்பிரிவை தரமுயர்த்தியதுடன், இதற்குள் இராணுவப் பிரிவையும் இணைத்து ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பிரிவு என பெயர் மாற்றம் செய்தது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், சிறப்பு அதிரடிப் படை மற்றும் அலரி மாளிகைளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட இராணுவத்தை நம்பினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் முயற்சிகளிலிருந்து இராணுவத்தினர் தன்னைக் காப்பாற்றினர் எனும் காரணத்தினாலேயே அவர் தனது பாதுகாப்பு பிரிவை குறித்து அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இறுதியில் கடந்த மாதம் 30ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் இராணுவ பாதுகாப்பு பரிவை கலைத்தார். இராணுவத்தின் வரலாற்றில் இப்பிரிவானது மிகவும் குறுகிய காலம் வரை மாத்திரமே செயற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது கலைக்கப்பட்டமை ஜனாதிபதியின் பாதுகாப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என இராணுவ ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரிவு கலைக்கப்பட்ட போதிலும், மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பை வழங்குகின்ற இராணுவத்தினர் முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்புப் பிரிவு என புதிய பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளனர்.

இப்புதிய பிரிவின் தலைவராக கேர்ணல் மகேந்திரா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் மீதான சந்தேக நடவடிக்கையினாலேயே ஜனாதிபதிக்கான பாதுகாப்பானது முற்றிலும் மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ சிப்பாயின் நடவடிக்கையினால் நாட்டின் முதல் குடிமகனின் பாதுகாப்பு மீறப்பட்டது என ஜனாதிபதி செயலக பாதுபாப்பு பிரிவு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்விற்கு பிரதமர் கூடத் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை நிராயுதபாணியாகவே கூட்டிச் செல்ல முடியும்.

இவ்வாறிருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தனது கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்விற்கு சென்றமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தனிப்பட்ட 15 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போதிலும் நாமல் ராஜபக்சவிடம் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

துப்பாக்கியுடன் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்தேக நபர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி அல்ல எனவும் ஆனால் அவர் தன்னுடன் வந்திருந்தார் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இராணுவ சிப்பாய் தண்ணீர்ப் போத்தல் ஒன்றையே தனது கையில் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடம் துப்பாக்கி காணப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்தது என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், நாமல் ராஜபக்ச மிக முக்கியமான நபர்களுக்கான நுழைவாயிலின் ஊடாக கருத்தரங்கு மண்டபத்திற்குள் நுழையாமல், பொது நுழைவாயிலின் ஊடாக நுழைந்து, குறித்த சந்தேக நபரை தனது மெய்ப்பாதுகாவலர் என அறிமுகப்படுத்தியிருந்தமை விசாரணைகளின் போது தெரியவந்தது.

இதன் பின்னர், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் நாமல் ராஜபக்சவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் எவ்வித சோதனைகளுக்கும் உட்படுத்தாது கருத்தரங்கு மண்டபத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

பிரதமரின் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட ஆயுதம் ஏந்திய எவரும் குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு அப்பால் உள்நுழைய முடியாது என்பதுடன், ஜனாதிபதியை நெருங்கவும் முடியாது.

வேறெந்தத் தனிப்பட்டவர்களும் இப்பாதுகாப்புப் பொறிமுறையுடன் சவால் விட முடியாது. ஜனாதிபதியின் பாதுகாப்பு மீறப்பட்டமை பாரிய தவறாகும்.

புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியை பொறுப்பேற்கும் போது முன்னாள் ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு பதிலாக தனக்கு விசுவாசமான, மிகவும் நெருங்கிய ஒருவரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவது வழமையான ஒரு விடயம்.

ஆனால் ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவை அகற்றவுமில்லை, தனது பாதுகாப்பிற்காக புதிய இராணுவத்தினரை நியமிக்கவுமில்லை.

இதன்காரணமாகவே ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம் என குறித்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE