ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்த நர்சிங் யாதவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், எந்தவித கவலையும் இல்லாமல் ஒலிம்பிக்கில் பங்கேற்குமாறும், நாட்டுக்காக பதக்கங்களை வெல்வதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.
அத்துடன், எனக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படாது என்று உறுதியளித்தார். என்னைச் சந்தித்து ஆதரவளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எனக்கு ஆதரவளித்த மல்யுத்தச் சம்மேளனம், மக்கள், ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி. அனைவருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன்.
இதுபோன்ற நிலை வேறு எந்த வீரருக்கும் வரக்கூடாது. ஏனெனில் விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வம் குறைந்துவிடும். இந்த சர்ச்சைகள் அனைத்தையும் புறம்தள்ளிவிட்டு பதக்கம் வெல்வதில் கவனம் செலுத்த உள்ளேன் என்று நர்சிங் யாதவ் கூறினார்.
உங்களுக்கு எதிரான சதி வேலையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று நர்சிங் யாதவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.