மௌனமாக்கப்பட்ட நிழல்கள்- சர்வதேச மன்னிப்பு சபை நடாத்தும் இலங்கையர்களுக்கானா கவிதைப்போட்டி

665

 சனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்பு இலங்கையில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் முக்கியமான ஒரு பண்பைப் புலப்படுத்தி நிற்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக பகையுடன் முரண்படும் அரசியலில் ஈடுபட்டு வந்த தமிழர் தரப்பினால் அவர்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பகை முரண் அரசியலைக் கைவிட்டு நட்புமுரண் அரசியலைக் கையில் எடுத்துள்ளது. இம்மாற்றத்தின் காரணமாக அடிப்படையான பிரச்சனைகள் மீதான பார்வை வேறு ஒருபரிமாணத்தை எடுத்துக் கொண்டுள்ளது. இப்பரிமாணம் காரணமாக அடிப்படையான பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வுகள் காணப்படுமா என்ற ஐயமும் எழுத்துள்ளது. இனப்பிரச்சனையும்( சுயநிர்ணயம் அதிகாரப்பகிர்வு,நில அபகரிப்பு இராணுவமயமாக்கல் போன்றவை) அதன் வழி தோன்றிய இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், அரசியல்கைதிகள், காணமற்போகச் செய்யப்பட்டவர்கள் போன்ற பிரச்சனைகளும் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற போர்வைகளால் மூடப்படக்கூடிய சூழ்நிலைகள் தோன்றியுள்ளன.

இந்நிலையிற் சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையிற் காணமற் போனவர்கள் தொடர்பான விழிப்புணர்வை உலகமட்டத்திற் தோற்றுவித்து தொடர்ந்து பேணும் நோக்குடன் கவிதைப் போட்டியொன்றை அறிவித்துள்ளது. தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் படைப்புகள் அனுப்பப்படலாம் எனவும் நடுவர்குழுவிற் மூன்று மொழிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்ணணிப்படைப்பாளிகள் இடம்பெறுவதாகவும் படைப்புகள் அவர்களிடம் அனாமதேயமாகவே பரிசீலனைக்குக் கையளிக்கப்படும் எனவும் சர்வதேச மன்னிப்புச்பையின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

இலக்கியத்துக்கும், குறிப்பாக கவிதைக்கும் முக்கியமான விடயங்களை நோக்கி மனிதர்களின் மனங்களையும் கவனத்தையும் திருப்பும் நுண்ணிய ஆற்றல் உண்டு எனவும் ‘மிக அடர்த்தியான இருள் இருக்கின்ற போது, ஒரு சிறிய விளக்கையாவது ஏற்றுவது ஒரு நல்ல விடயம் என்ற அடிப்படையில் தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது’ எனவும் இந்தக் கவிதைப் போட்டியின் நடுவர் குழுவில் இடம்பெறுகிற ஈழத்துக் கவிஞர் சேரன் தெரிவிக்கிறார்.

உலகின் அனேகமான நாடுகளில் மனிதர்கள் காணாமற் போவது இன்னும் இடம் பெற்றவாறே உள்ளது. சமூக பொருளாதார அரசியற்காரணங்களுக்காக மனிதர்கள் காணாமற் போகச் செய்யப்படுகிறார்கள். ஆனால் அடிப்படையான விடையம் என்னவெனில் பலமுள்ளவர்களால் பலமற்றவர்கள் காணமற் போகச் செய்யப்படுகிறார்கள். அதிகாரம் வாய்த்தவர்களின் இராசதானி நீடித்திருக்கவேண்டும் என்பதற்காக இக்காணமற்போகச் செய்தல் நிகழ்த்தப்படுகிறது. மனிதத்தை நேசிக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் இதற்கெதிராகத் தனது குரலை எழுப்பவேண்டும். வருவார் வருவார் எனக்காத்திருக்கும் காணாமற் போகச்செய்யப்பட்டவர்களின் உறவுகளுக்கு இந்த உலகில் நியாயம் மிக இலகுவில் கிடைத்து விடாது. ஆனால் அவர்களுக்கு நீங்கள் இவ்வுலகிற் தனித்து விடப்படவில்லை என்ற செய்தியைச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. இலங்கை இதுவரை அதன் தென்பகுதியிற் இரண்டு இராணுவக்கிளர்ச்சிகளையும் தமிழர்பகுதிகளில் தனிநாட்டுக்கோரிக்கைக்கான கிளர்ச்சியையும் சந்தித்துள்ளது. இம் முரண்பாடுகளில் அரசும் போராளிகளும் மனிதர்களைக் காணாமற்போகச் செய்திருக்கிறார்கள். இவற்றுக்கான பொறுப்புக்கூறல்களும் நினைவு கூரல்களும் இவை இனிமேலும் நிகழாதிருப்பதற்கான விழிப்புணர்வுகளும் அவசியமானவை.

SHARE