யப்பான் தூதுவராலயத்தின் அரசியல் ஆலோசகர் மரிக்கோ யமாமொடா அவர்களுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
2015.11.18ம் நாளாகிய இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மேலும் சில பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பு தொடர்பில் மதிப்பிற்குரிய வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எம் தாயக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இடர்பாடுகள் பற்றியதாக இன்றைய சந்திப்பின் கலந்துரையாடல் அமைந்திருந்தது.
சிறையிலுள்ள கைதிகளின் விடுதலை மற்றும் அவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள், வாழ்வாதாரச்சிக்கல்களை எதிர்நோக்கும் பெண்தலைமைத்துவக்குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள், கடற்தொழிலாளர்களின் நிலைகள், அரசியல் செல்வாக்குடன் நடைபெறும் காடழிப்பு, கேப்பாப்பிலவு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தமிழ் மக்கள் மீள குடியமர்த்தப்படாத நிலை, வடமாகாணசபை எதிர்நோக்கும் சிக்கல்கள், மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக வயல்நிலங்களின் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன என தெரிவித்தார்.
இருமணிநேரம் தொடர்ந்த இக்கலந்துரையாடல் சுமார் 12.00 மணியளவில் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.