வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் 14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் – மாம்புரி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மாணவியின் மூத்த சகோதரி செய்த முறைப்பாட்டுக்கு அமைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முறைப்பாடு செய்த 21 வயதான தனது மூத்த சகோதரியுடன் 14 வயதான பாடசாலை மாணவி வசித்து வந்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி தனது தங்கையை அருகில் உள்ள வீட்டில் இருக்கும் பெண்ணின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, கொழும்பு சென்றுள்ளார். மாலை வீடு திரும்பிய போது, இரண்டு பாதணிகள், செல்போன் மற்றும் பணப்பை ஆகிய வீட்டுக்குள் கிடந்துள்ளன.
இது குறித்து தங்கையிடம் விசாரித்த போது அவர் எதனையும் கூறவில்லை.
செல்போன் மற்றும் பணப்பை என்பன அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் இளைஞனுடையது என்பதை அறிந்து கொண்டுள்ளார்.
அந்த இளைஞனுக்கும் தனது தங்கைக்கும் இடையில் அண்மைய காலமாக தொடர்புகள் இருந்து வந்துள்ளமை தான் அறிந்திருந்தாகவும் மாணவியின் சகோதரி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
மூத்த சகோதரி, பெரியம்மாவின் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் காதலன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தனது தங்கை தன்னிடம் கூறியதாகவும் யுவதி முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.