யாழ்ப்பாணத்தில் என்ன வளங்கள் இல்லை என இளைஞர், யுவதிகளான நீங்கள் நினைக்கின்றீர்கள். அவ்வாறான வளம் நிறையிருக்கின்றது. அதற்கான தேடல்கள் உங்களிடம் அதிகரிக்கப்பட வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களின் பின்னர் நாங்கள் ஒரு கட்டமைப்பிலிருந்து வேறொரு கட்டமான சமூதாயமாக முன்னேறிக் கொண்டு வருகின்ற இத்தருணத்தில் எதிர்கால இளைஞர், யுவதிகள் தேடலுக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வர வேண்டும். அப்போது தான் தொழிலின் வளங்கள் மேம்படும் எனவும் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சி அபிவிருத்தியினை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டம் நேற்று யாழ் யூரோ மாநாட்டு மண்டபத்தில், அதன் இணைப்பாளர் ப.நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழினத்தின் இளைஞர், யுவதிகள் எதிர்க்கின்ற குணங்கள் மாறாது? இது தான் தமிழர்களின் உரிமையின் வழக்கம். இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியிலும் தற்போது எதிர்க்கின்ற குணம் அதிகரித்துள்ளது.
இங்கிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குத் தொழிலுக்காக யாழ்ப்பாண இளைஞர் யுவதிகள் செல்கின்றார்கள் என்றால் ஏன் இங்கு இவ்வாறான தொழிலினை பார்க்க முடியாது? ஆனால் உங்களால் முடியும்.
இங்குள்ள இளைஞர், யுவதிகள் சோம்பேறிகளாக இருக்கின்றீர்கள். அதுதான் காரணம். உங்களிடம் தேடல்கள் அதிகரிக்கவில்லை என்று தான் நான் குறிப்பிடுவேன் என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மேலும் தெரிவித்தார்.