யாழ்ப்பாணத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 40 குடும்பங்கள், விரைவில் விடுவிக்கப்படவுள்ள பிரதேசத்தில் தமது காணிகளும் உள்ளடங்கியுள்ளதாகப் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு, இரண்டொரு தினங்களுக்குள் ‘உங்களது காணி விரைவில் விடுவிக்கப்படும்’ என யாழ். மாவட்டச் செயலகத்தால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி. வடக்கில் விரைவில் விடுவிக்கப்படவுள்ள 5 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு வலி.வடக்குப் பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் முடிவில், சிலருக்கு விடுவிக்கப்படவுள்ள பிரதேசத்தை நேரில் அழைத்துச் சென்று காண்பிக்கப்பட்டது. இதில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 40 குடும்பங்கள் மட்டும் விடுவிக்கப்பட்ட இடத்தில் தமது காணிகள் உள்ளடங்கியுள்ளதாக பதிவுகளை வழங்கியுள்ளனர்.
காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகப் பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு ஒருசில தினங்களுக்குள் கடிதம் வழங்கி வைக்கப்படவுள்ளது. ‘உங்களது காணி விரைவில் விடுவிக்கப்படும். வீடு வழங்கப்படும்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவுள்ளது.