கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் மற்றும் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இதன் முதற் கட்டமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரை சந்தித்து பேசிய அவர், வடக்கில் உள்ள படைத்தளங்களுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 30ஆம் திகதி கிளிநொச்சி படைகளின் தலைமையகத்துக்கு சென்று, அதன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அஜித் காரியக்கரவணவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பையடுத்து, கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை சந்தித்துப் பேசியுள்ளார்.
குறிப்பாக இந்த சந்திப்பின் போது யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.