யாழ் இளைஞன் வெளிநாட்டில் அடித்துக் கொலை! பணம் தந்தால் மட்டுமே சடலம் கிடைக்கும்..! பெற்றோர் ஆவேசம்

225

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் யாழ். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கடற்கரை பிரதேசமான சியாரா லியோன் என்ற பகுதில் வைத்தே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர், கடந்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் திகதி சுவிட்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார்.

இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவின் கடற்கரைப் பிரதேசத்தில் இவர்களை தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த இளைஞன் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர், கரவெட்டியிலுள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை(22) குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் போன்று பல இளைஞர்கள் அம்முகவரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட சிலருக்கு 16 இலட்சம் ரூபாய் பணம் வழங்கியே தமது மகன் சுவிட்ஸர்லாந்துக்கு செல்வதற்காக ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார்.

மேலும் பணம் கேட்டு மகனை துன்புறுத்தியதால் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அவனை தாக்கிக் கொன்று விட்டார்கள். மேலும் தற்போது 15 இலட்சம் ‌ரூபாய் பணம் தந்தாலே அவனுடைய சடலத்தைத் தருவோம். அல்லாவிட்டால் தரமாட்டோம் என, தற்போது எம்மை மிரட்டுகின்றனர் என்று இளைஞனின் பெற்றோர் ஆவேசமாகவும், மிகந்த கவலையுடனும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

SHARE